பக்கம் எண் :

1004திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

81. திருத்தோணிபுரம்

பதிக வரலாறு:

     சீகாழிப் பதிகங்களுள் ஒன்றாய்க் கிளந்தோதப்பட்டது.

திருவிராகம்
பண்: சாதாரி

ப.தொ.எண்: 339   பதிக எண்: 81

திருச்சிற்றம்பலம்

3668. சங்கமரு முன்கைமட மாதையொரு
       பாலுடன் விரும்பி
அங்கமுடன் மேலுறவ ணிந்துபிணி
     தீரவருள் செய்யும்
எங்கள்பெரு மானிடமெ னத்தகுமு
     னைக்கடலின் முத்தந்
துங்கமணி யிப்பிகள் கரைக்குவரு
     தோணிபுர மாமே.                    1


     1.பொ-ரை: முன்கையில் சங்குவளையல் அணிந்த உமாதேவியைத்
தன்னுடைய உடம்பின் ஒரு பாகமாக விருப்பத்துடன் அமர்த்தி, எலும்பைத்
தன் உடம்பில் நன்கு பொருந்தும்படி அணிந்து, தன்னைத் தியானிப்பவரது
மும்மலப் பிணிப்பு நீங்கும்படி அருள்புரிகின்ற எங்கள் சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது அலைவீசுகின்ற கடலினின்றும் முத்துக்களும்,
இரத்தினங்களும், சங்குப்பூச்சிகளும் கரைக்கு வந்து சேருகின்ற
திருத்தோணிபுரம் ஆகும்.

     கு-ரை: சங்கு அமரும்-சங்கு வளையல் பொருந்திய. (முன்கை)
மடமாதை-இளமைமாறாத உமாதேவியாரை. உடன் ஒருபால்-தன்னோடு
உடம்பின் ஒருபாகமாக. விரும்பி-விரும்பி அமர்த்தி. அங்கம் - எலும்பை.
உடல்மேல்-உடம்பின்மீது. உற - பொருந்தும்படி, அணிந்து. பிணிதீர -
மும்மலப் பிணிப்பு நீங்கும்படி. அருள்செய்யும் எங்கள் பெருமான் இடம்.
முனைக்கடலின் - அலை முனைந்து வீசுதலையுடைய கடலினின்றும்.
முத்தம்-முத்துக்களும். துங்கம் - உயர்ச்சி பொருந்திய. மணி -
இரத்தினங்களும். இப்பிகள் - சங்குப் பூச்சிகளும். கரைக்கு வருகின்ற
தோணிபுரம்.