பக்கம் எண் :

86ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

என்றுணர்ந்து உணர்த்தியருளினார். அவரும், ‘தில்லைச் சிற்றம்பலத்துச் செல்வம், கவித்த கைம் மேலிட்டு நின்று ஆடும்’ திருக்குறிப்பினை அப்பருக்கு முன்பே அறிந்திருப்பார் என்று அறியக்கிடக்கின்றது. “என்போல் வினை உடையார் பிறர் ஆர்? தினையின் பாகமும் அடிநாயேனைப் பிரிவது உடையான் திருக்குறிப்பு அன்று” (திருவா.41) என்று, உடையானது திருவுள்ளக் குறிப்பினை ஓதியருளியதொடு அமையாது, அம் முழுமுதல்வனது திருக்குறிப்பினையே குறிக்கொண்டும் கடைக் கொண்டும் இருக்கும்படி அடியரை ஏவுதலையும் கருதின், அடியார் கடமைகளுள் முதன்மையும் இன்றியமையாமையும் உடையது எது என்றும் அஃது இறைவன் திருக்குறிப்பே அறிந்து கொண்டிருத்தல் என்றும் புலப்படும். அதுதான் அடியார்க்குரிய குறிக்கோள் ஆகும். ஆண்டவனது திருவுள்ளத்தது “திருக்குறிப்பு” ஆகும்.

     அடியவரது திருவுள்ளத்தது “குறிக்கோள்” ஆகும். அது ‘குறி’ எனவும் படும். இறைவனது குறிப்புள்ளார் அடியாராவர்.

“பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதை மார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோள்இ லாது கெட்டேன்
சேலுலாம் பழன வேலித் திருக்கொண்டீச் சரத்து ளானே”.

                                   (தி.4 ப.67 பா.9)
“,,,,,,,,,,,,,,,,,,,,, பிரமன்றன் சிரமொன்றைக் கரமொன் றினாற்
கொய்தானைக் கூத்தாட வல்லான் றன்னைக்
     குறியிலாக் கொடியேனை அடியே னாகச்
செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்
     சேராதார் நன்னெறிக்கட் சேரா தாரே”

                                   (தி.6 ப.66 பா.8)
“செறிவிலேன் சிந்தை யுள்ளே சிவனடி தெரிய மாட்டேன்
குறியிலேன் குணமொன் றில்லேன் கூறுமா கூற மாட்டேன்
நெறிபடு மதியொன் றில்லேன் நினையுமா நினைய மாட்டேன்
அறிவிலேன் அயர்த்துப் போனேன் ஆவடு துறை யுளானே”

                                  (தி.4 ப.57 பா.7)
“தாமே தமக்குச் சுற்றமும்
     தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
     என்ன மாயம் இவைபோகக்