| 363. | குடையுடை யரக்கன் சென்று | | | குளிர்கயி லாயவெற் பின் | | | இடைமட வரலை யஞ்ச | | | வெடுத்தலு மிறைவ னோக்கி | | | விடையுடை விகிர்தன் றானும் | | | விரலினா லூன்றி மீண்டும் | | | படைகொடை யடிகள் போலும் | | | பழனத்தெம் பரம னாரே. | 10 |
திருச்சிற்றம்பலம்
(புறத்தே) புகழ்ந்து பாடியும். ஏத்த - எடுத்தோத. எரியுரு- ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதிவடிவம். வண்ணம் - நிறம்; அழகு. நன்மலர்கள் - மணமிக்க பூக்கள். தூவி வாழ்த்துவார் - பூசனை புரிந்து போற்றுமவர். பண்ணுலாவும் பாடல்களால் வாழ்த்தி ஏத்தக்கேட்டு அருள்கள் செய்தார் பரமனார். 10. பொ-ரை: அரசனுக்குரிய வெண் கொற்றக் குடையை உடைய இராவணன் சென்று குளிர்ந்த கயிலாய மலையை, அங்கிருந்த இளையளாகிய பார்வதி அஞ்சுமாறு பெயர்த்த அளவில், காளையை வாகனமாக உடைய, உலகப் பொருள்களிலிருந்து வேறுபட்ட தலைவராகிய பழனத்து எம் பெருமான், தம் விரலினால் அழுத்தி ஊன்றி அவனை நெரித்துப் பின் அவன் பாடலைக் கேட்டு வெகுளி நீங்கி அவனுக்கு வாட்படையை வழங்கியருளியவராவர். கு-ரை: குடை அரசர்க்குரிய கொற்றக்குடை. குளிர் கயிலாய வெற்பு:- பேரின்பக் குளிர்ச்சி. மலைக்குக் குளிர்ச்சி சாதியடை. வெற்பினிடை - மலை யிடையில், எடுத்த வேளையில் மடவரலை - உமாதேவியாரை, மடவரலை நோக்கி, அரக்கனை நோக்கி எனின், ‘அஞ்ச’ - அஞ்சுவித்து. பிறவினைப் பொருட்டாம். விடை - எருது, விகிர்தன் - சிவன்; பசுபாசங்களின் வேறுபட்டவன். படை - வாள். கொடை - நல்கலையுடைய. அடிகள் - கடவுள்.
|