(தி.6 ப.25 பா.1) என்று அப்பரே அருளிப்போந்தமை காண்க. இக்கருத்தையே தருமைஆதீன முதற்குரவர் ஸ்ரீகுருஞான சம்பந்தரும், தமது குருநாதன் தமக்கு உணர்த்தியதாக அருளியுள்ள இருவெண்பாக்களைக் கண்டு உண்மை தெளியலாம். முதலில் குருநாதர் தமக்கருளிய ஆணையிட்ட பாடல். ஏதேதுசெய்திடினும் ஏதேது பேசிடினும் | ஏதேது சிந்தித் திருந்திடினும் - மாதேவன் | காட்டிடுவதானஅருள் கண்ணைவிட்டு நீங்காது | நாட்டம் அதுவாய்நட. | -சிவபோகசாரம் |
குருஆணைப்படி நடந்ததனால் விளைந்த அநுபவப் பயன்உணர்த்தும் பாடல். ஏதேது செய்தாலும் ஏதேது சொன்னாலும், | ஏதேது சிந்தித் திருந்தாலும், - மாதேவா | நின்செயலே என்று நினதருளா லேஉணரின் | என்செயலே காண்கிலே னே. | -சிவபோகசாரம் |
நாம், யான், எனது என்னும் தருக்கால் எதனையும் காண இயலாதுஎன்பதே முடிவான பொருள். மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி | மயானத்தான் வார்சடையான் என்னின் அல்லால், | ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன் | ஒரூரன் அல்லன் ஓர்உவமன் இல்லி | அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும், | அவன்அருளே கண்ணாகக் காணின் அல்லால் | இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன் | இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே. | -தி.6 ப.97 பா.10 |
இப்பாடலே இறைவனை எழுதிக்காட்ட முடியாது என்று அறிவிக்கும் அப்பரின் அமுதமொழிப்பாடல். புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்: புண்ணியம் என்பதற்கு நல்லதற்கெல்லாம் மேலாய நல்லது என்பதே பொருள். இதற்குமேல் ஒரு நன்மை இல்லை என்பதையே இப்புண்ணியம் என்ற சொல் குறிக்கும். உலகியலில் சாதாரண நன்மைகளையே புண்ணியம் என்ற சொல்லால் குறிப்பிடுவர். சமணநூலாகிய சீவகசிந்தாமணியும் சிவபெருமானைப் "போகம் ஈன்ற புண்ணியன்" சீவகசிந்தாமணி (362) என்று குறிப்பிட்டுள்ளமை குறிக்கத்தக்கது. அப்பர் பெருமான் நிறைவாகப் பூம்புகலூர் சென்று பணி செய்து வாழ்ந்தார். அப்போது. "வந்த பொருளாசை, மண்ணாசை, பெண்ணாசை, இந்த வகை ஆசையெல்லாம்" அவரிடம் இல்லை என்பதை உலகத்தார்க்குக் காட்ட எண்ணிய சிவபெருமான், உழவாரப்பணி செய்தபோது பொன்னும் மணியும்
|