பக்கம் எண் :

1029
 
715.வெய்ய மாகரி ஈருரி யானே

வேங்கை யாடையி னாய்விதி முதலே

மெய்ய னேஅட லாழியன் றரிதான்

வேண்ட நீகொடுத் தருள்புரி விகிர்தா

செய்ய மேனிய னேதிக ழொளியே

செங்க ணாதிரு வாவடு துறையுள்

ஐய னேஎனை அஞ்சல்என் றருளாய்

ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே.

7



கு-ரை: எல்லாவற்றினும் மேலான பொருளாகிய இறைவன் ஒருவனையன்றி, குறை சிறிதும் இல்லாத நிறைவுடைய பொருள் வேறொன்றில்லாமையை வலியுறுத்துணர்த்துவார், ''குறைவிலா நிறைவே'' என, எதிர்மறையானும், உடம்பாட்டானும் அருளிச் செய்தார். ''குறைவிலா நிறைவே குணக்குன்றே'' என்ற இதனை,

''குறைவிலா நிறைவே கோதிலா அமுதே

ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே''

(தி. 8 கோயில் திருப். 5)

என்ற திருவாசகத்தோடும் வைத்துக் காண்க. தமக்குத் துணைசெய்ய வல்லார் பிறரின்மையை வலியுறுத்து வேண்டுவார், 'உறவிலேன்' எனத் தம்மேலும், 'உறவு யார்' எனப் பிறர் மேலும் வைத்து, இருவாற்றானும் அருளிச்செய்தார். ''ஒரு பிழை'' என்றது, சூள் பிழைத்தமையை. 'ஒரு பிழை பொறுத்தால் இழிவுண்டே' என்றது, சுவாமிகளுக்கு இறைவரோடுளதாய உரிமையை இனிது புலப்படுத்துவதாகும். திருவாரூரை அடையும் ஆர்வத்தினாலே இந்நிலை வந்தது என்பதனை நினைகின்றாராதலின், ''திருவாரூர்ச் செம்பொனே'' என்று அருளினார். இத்தலத்தில் இறைவர்க்கு, 'செம்பொற்றியாகர்' என்னும் பெயர் வழங்குதல் இதுபற்றியே போலும்!

7. பொ-ரை: கொடிய, பெரிய யானையினது உரித்த தோலையுடையவனே, புலித்தோல் ஆடையை உடுத்தவனே, விதிவிலக்குக்களுக்குத் தலைவனே, மெய்ப்பொருளானவனே, அன்று திருமால் வேண்டிக்கொள்ள, வலிமையையுடைய சக்கரத்தை அவனுக்கு அளித்தருளிய இறைவனே, சிவந்த திருமேனியையுடையவனே, ஒளிகள் எலலாவற்றினும் மேம்பட்டு விளங்குகின்ற ஒளியாய் உள்ளவனே, நெருப்புக்கண்ணை உடையவனே, திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கின்ற தலைவனே, தேவர்களாகிய விலங்கு