பக்கம் எண் :

1078
 

76. திருவாஞ்சியம்

பதிக வரலாறு:

சுவாமிகள், திருவீழிமிழலையைப் பணிந்து பாடிய பின், திருவாஞ்சியம் சென்று தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 60)


குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரது பெருமைகள் பலவற்றையும் எடுத்தோதி அருளிச்செய்தது.

பண்: பியந்தைக் காந்தாரம்

பதிக எண்: 76

திருச்சிற்றம்பலம்

771.பொருவ னார்புரி நூலர்

புணர்முலை உமையவ ளோடு

மருவ னார்மரு வார்பால்

வருவதும் இல்லைநம் மடிகள்

திருவ னார்பணிந் தேத்துந்

திகழ்திரு வாஞ்சியத் துறையும்

ஒருவனார் அடி யாரை

ஊழ்வினை நலியஒட் டாரே.

1



1. பொ-ரை: நம் இறைவர், தீயவரோடு மாறுபடுபவர்; முப்புரி நூலை அணிபவர்; நெருங்கிய தனங்களையுடைய உமையோடு கூடியிருத்தலை உடையவர்; தம்மை அடையாதவரிடத்தில் வருவதும் இல்லை; திருமகளை உடைய திருமால் வணங்கித் துதிக்கின்ற, புகழால் விளங்குகின்ற திருவாஞ்சியத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவராகிய அவர், தம் அடியவரை ஊழ்வினை வந்து நலிய ஒட்டாது ஒரு தலையாகக் காப்பர்.

கு-ரை: 'அவர்களை நினைவதும் இல்லை' எனப் பொருள் தந்து நிற்றலின், "வருவதும்" என்ற உம்மை, எதிரது தழுவிய எச்சம். 'திருவன்' என்பது, 'ஆர்' என்னும் இடைச்சொற் பெற்று வந்தது. இனி, 'திருவன்னார்' எனக்கொண்டு, 'திருமகள் போலும் மகளிர் பணிந்தேத்தும்' என்றலுமாம். 'உள வினை' என்பதும் பாடம். ஏகாரம், தேற்றம்.