பக்கம் எண் :

1108
 

79. திருப்பருப்பதம்

பதிக வரலாறு:

சுவாமிகள், திருக்காளத்திமலையைத் தொழுது, அங்கிருக்கும் நாளில் திருப்பருப்பதத்தை நினைந்து அங்குச் சென்று பணிந்ததுபோல மகிழ்ந்து பாடியருளியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 198)

குறிப்பு: இத் திருப்பதிகம். 'திருப்பருப்பதம்' என்னும் சிவபிரானது திருமலையைச் சிறப்பித்து அருளிச்செய்தது.

பண்: நட்டபாடை

பதிக எண்: 79

திருச்சிற்றம்பலம்

802.மானும்மரை இனமும்மயி

லினமுங்கலந் தெங்கும்

தாமேமிக மேய்ந்துதடஞ்

சுனைநீர்களைப் பருகிப்

பூமாமர முரிஞ்சிப்பொழி

லூடேசென்று புக்குத்

தேமாம்பொழில் நீழற்றுயில்

சீபர்ப்பத மலையே.

1



1. பொ-ரை: மான்களின் கூட்டமும், மரைகளின் கூட்டமும், மயில்களின் கூட்டமும் எங்கும் பொருந்தித் தம்விருப்பப்படியே தமக்குரிய உணவுகளைத் தேடி உண்டு, பெரிய சுனைகளில் உள்ள நீரைக் குடித்து, பூத்த பெரிய மரங்களில் உராய்ந்து அவற்றின் செறிவூடே சென்று, தேமாமரச் சோலையின் நிழலில் உறங்குகின்ற, 'திருப்பருப்பதம்' என்னும் மலையே, எங்கள் சிவபிரானது மலை.

கு-ரை: 'எங்கள் சிவபிரானது மலை' என்பது சொல்லெச்சம்; இஃது இத் திருப்பதிகத்தின் எல்லாத் திருப்பாடல்கட்கும் ஒக்கும். உரிஞ்சுதல், செறிவினால், குறிப்பின்றியும் நிகழ்வது என்க. இத் திருமலையை, திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளும், திருநாவுக்கரசு சுவாமிகளும், 'பருப்பதம்' என்றே குறித்தருளுதலாலும், சேக்கிழார் நாயனார், அவர்கள் அருளியவாறே வாளா கூறும் வழி, 'பருப்பதம்' என்றும் (தி. 12 ஏ. கோ. புரா. 198.), அடைபுணர்த்துக் கூறும் வழி, 'திருப்பருப் பதம்'