பக்கம் எண் :

1114
 
809.திரியும்புரம் நீறாக்கிய

செல்வன்றன கழலை

அரியதிரு மாலோடயன்

றானும்மவ ரறியார்

கரியின்னின மோடும்பிடி

தேனுண்டவை களித்துத்

திரிதந்தவை திகழ்வாற்பொலி

சீபர்ப்பத மலையே.

8

810.ஏனத்திரள் கிளைக்கஎரி

போலமணி சிதற

ஏனல்லவை மலைச்சாரலிற்

றிரியுங்கர டீயும்

மானும்மரை இனமும்மயில்

மற்றும்பல வெல்லாம்

தேனுண்பொழில் சோலைமிகு

சீபர்ப்பத மலையே.

9



8. பொ-ரை: களிற்றியானைகளின் கூட்டத்தோடும் பிடியானைகளின் கூட்டம் தேனை உண்டு, பின், அவ் விருகூட்டங்களும் களித்துத் திரிதருகின்ற அழகு விளங்குதலால் பொலிவெய்திய திருப்பருப்பத மலையில், வானத்தில் திரிகின்ற முப்புரங்களை நீறாகச் செய்த செல்வனாகிய சிவபெருமானது திருவடிகளை, ஏனையோர்க்கு அரிய திருமாலும், பிரமனும் ஆகிய அவர்தாமும் காணமாட்டார்.

கு-ரை: "அயன்றானும்" என்றதில் தான், அசைநிலை. உம்மை, சிறப்பு. "அவர்" என்றது ஒடுவெனெண்ணின் தொகைப் பொருட்டு. 'திரிதந்த ஐ' எனப் பிரிக்க. அரி அயனும் இறைவன் திருவடியை அங்குக் காண மாட்டாமை, அம் மலையது சிறப்பால் சிவகணத்தவர் பலரும் நெருங்கி நிற்றலின் என்க.

9. பொ-ரை: மலைச் சாரலில் பன்றியின் கூட்டம் நிலத்தை உழ, அவ்விடத்தினின்றும் நெருப்புப் போல மாணிக்கங்கள் வெளிப்பட, அவற்றைக் கண்டு, தினைக்கூட்டத்தையுடைய மலைச்சாரலை விடுத்து ஓடிய கரடியும், மானும், மரைக் கூட்டமும், மயிலும், மற்றும் பலவும் ஆகிய எல்லாம் பின்பு தேனை உண்டு களிக்கின்ற பூஞ்சோலைகளும், பிற சோலைகளும் மிகுந்திருக்கின்ற, 'திருப்பருப்பதம்' என்னும் மலையே, எங்கள் சிவபிரானது மலை.