பக்கம் எண் :

1216
 
936.உரைப்பார் உரைஉகந் துள்கவல்

லார்தங்கள் உச்சியாய்

அரைக்கா டரவா ஆதியும்

அந்தமும் ஆயினாய்

புரைக்காடு சோலைப் புக்கொளி

யூர்அவி னாசியே

கரைக்கால் முதலையைப் பிள்ளை

தரச்சொல்லு காலனையே.

4

937.அரங்காவ தெல்லா மாயிடு

காடது அன்றியும்

சரங்கோலை வாங்கி வரிசிலை

நாணியிற் சந்தித்துப்



4. பொ-ரை: உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவுமானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள, 'அவினாசி' என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.

கு-ரை: "உகந்து" என்னும் வினையெச்சம் எண்ணின்கண் வந்தமையின், அதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. "காடுசோலை", உம்மைத்தொகை. "கரைக்கால்" என்றதில் "கால்" ஏழனுருபு. "காலனை" என்றதனை. "முதலையை" என்றதற்கு முன்னர்க் கூட்டி, இரண்டன்கண்ணும் எண்ணும்மை விரித்துரைக்க. 'காலனை முதலை யிடத்தும், முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு' என்றபடி செம்பொருள்பட சுவாமிகள் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே, பிள்ளை கரைக்கண் தரப்பட்டமை அறியற்பாற்று.

5. பொ-ரை: திருப்புக்கொளியூரில் உள்ள, குரங்குகள் குதித்து ஆடுகின்ற சோலையையுடைய, 'அவினாசி' என்னும் திருக்கோயிலை இடமாகக்கொண்ட, குழையை யணிந்த காதினை உடையவனே, உனக்கு நடனமாடும் இடமாய் இருப்பது, எல்லாரும் அழிகின்ற முதுகாடு; அதுவன்றியும், நீ அம்பை எடுத்து, வரிந்த வில்லில் உள்ள நாணியில் தொடுத்து, மூன்று ஊர்கள் அழிய அழித்தாய்.