பக்கம் எண் :

1227
 
953.போரார் புரம்எய் புனிதன் அமரும்
சீரார் நறையூர்ச் சித்தீச் சரத்தை
ஆரூ ரன்சொல் லிவைவல் லவர்கள்
ஏரார் இமையோர் உலகெய் துவரே.

11

திருச்சிற்றம்பலம்


11. பொ-ரை: போர் செய்தலை உடையவரது முப்புரத்தை அழித்த தூயவனாகிய இறைவன் விரும்பி எழுந்தருளியிருக்கின்ற, புகழ் நிறைந்த திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நம்பியாரூரன் பாடிய இப் பாடல்களைப் பாட வல்லவர்கள், எழுச்சிபொருந்திய தேவருலகத்தை அடைவார்கள்.

கு-ரை: "சொல் இவை" என்றது வினைத் தொகை.

சுந்தரர் அற்புதங்கள்

 
வெங்கரா வுண்ட பிள்ளையை நல்குமே

வெள்ளை யானையின் மீதேறிச் செல்லுமே

மங்கை பாகனைத் தூது நடத்துமே

மருவியாறு வழிவிட நிற்குமே

செங்க லானது தங்கம தாக்குமே

திகழும் ஆற்றிட்டுச் செம்பொன் எடுக்குமே

துங்க வான்பரி சேரற்கு நல்குமே

துய்ய நாவலூர்ச் சுந்தரர் பாடலே.

- தனிப்பாடல்