பக்கம் எண் :

1254
 
987.வானுடை யான்பெரியான மனத

தாலும் நினைப்பரியான்

ஆனிடை ஐந்தமர்ந்தான் அணு

வாகியொர் தீயுருக்கொண்

டூனுடை இவ்வுடலம் ஒடுங்

கிப்புகுந் தான்பரந்தான்

நானுடை மாடெம்பிரான் நண்ணும்

ஊர்நனி பள்ளியதே.

3



3. பொ-ரை: விண்ணுலகத்தைத் தனதாக உடையவனும், யாவரினும் பெரியோனும், மனத்தாலும் நினைத்தற்கரியவனும், பசுவினிடத்துத் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை விரும்புபவனும், நுண்ணிய பொருளாகி, சுடர் வடிவத்தைக்கொண்டு, ஊனையுடையதாகிய இவ்வுடம்பினுள் அடங்கிப் புகுந்தவனும், உலகம் எல்லாம் தன்னுள் அடங்க விரிந்தவனும், நான் உடைய செல்வமாய் இருப்பவனும் ஆகிய எம்பெருமான் பொருந்தியிருக்கின்ற ஊர் திருநனிபள்ளியே.

கு-ரை: உடம்பிற் புகுதல், உயிரிடத்து நிற்றல். ஆகவே, 'அதனினும் நுண்ணியன்' என்பார், 'அணுவாகி' என்றும், உயிரிடமாகக் காணலுறுவார்க்கு, அவர் இதயத்தில் சுடர் வடிவாய் விளங்குதலின், 'தீயுருக்கொண்டு' என்றும் அருளினார். இறைவன், தன்னை நினைவாரது உள்ளத்தில் சுடர்வடிவாய் விளங்குதலை,

"சுடர்விட்டுளன் எங்கள் சோதி"

(தி. 3 ப. 54 பா. 5)

என்றும்,

"ஆன்ற அங்கிப் புறத்தொளி யாய்அன்பின்
ஊன்ற உள்ளெழும் சோதியாய் நின்றனன்"

(தி. 12 திருஞான. புரா. 835)

என்றும் அருளிப்போந்தவாற்றான் உணர்க.