பக்கம் எண் :

1268
 

99. திருநாகேச்சரம்

பதிக வரலாறு:

சுவாமிகள், திருவிடைமருதூர்ப் பெருமானைத் தொழுது, தொண்டர்களுடன் திருநாகேச்சரத்தை யடைந்து பணிந்து பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 5-66)

குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரது அருட் செயல்களை, அவரை வினாவுமுகத்தாற் சிறப்பித்து அருளிச்செய்தது.

பண்: பஞ்சமம்

பதிக எண்: 99

திருச்சிற்றம்பலம்

1006.பிறையணி வாணுதலாள் உமை

யாளவள் பேழ்கணிக்க

நிறையணி நெஞ்சனுங்க நீல

மால்விடம் உண்டதென்னே

குறையணி குல்லைமுல்லை அளைந்

துகுளிர் மாதவிமேல்

சிறையணி வண்டுகள்சேர் திரு

நாகேச் சரத்தானே.

1



1. பொ-ரை: சிறகுகளையுடைய அழகிய வண்டுகள், இன்றியமையாத, அழகிய துளசியிலும், முல்லை மலர்களிலும் மகரந்தத்தை அளைந்து, பின்பு குருக்கத்திக் கொடியின்மேல் சேர்கின்ற திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ பிறைபோலும், அழகிய, ஒளிபொருந்திய நெற்றியை உடையவளாகிய உமையவள் மருளவும், திட்பம் பொருந்திய மனம் கலங்கவும், நீல நிறத்தை உடைய, பெரிய நஞ்சினை உண்டதற்குக் காரணம் யாது?

கு-ரை: 'தேவர்களைக் காத்தற் காரணமாக எழுந்த கருணைதானோ?' என்பது குறிப்பெச்சம். வருகின்ற திருப்பாடல்களில் இவ்வாறுரைப்பனவும் அவை. கணித்தல்- எண்ணுதல், பேழ் கணித்தல் பெரிதும் எண்ணுதல். இது, கழிவிரக்கம், ஐயம், மருட்கை முதலிய பொருள்களை உணர்த்தும். குறை - இன்றியமையாமை. 'கொல்லை முல்லை' என்பதும் பாடம்.