சென்னை, கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் நகர்களிலிருந்து பேருந்துகளில் பண்ணுருட்டி வரலாம். அப்பர் அருள் பெற்ற தலம. இது அட்ட வீரட்டங்களுள் ஒன்று. முப்புரங்களை எரித்த தலம். கருடன், பிரமன், விஷ்ணு, பஞ்சபாண்டவர்கள் பூசித்துப் பேறுபெற்றனர். பல்லவ அரசன் திருநாவுக்கரசரை நீற்றறையில் இட்ட தலமும் இதுவே. இது இப்போது ஓடையாக இருக்கிறது. சக்கரதீர்த்தம் என வழங்குகிறது. குணதரேச்சுரம் என்ற ஒரு கோயிலும் உண்டு. அது குணதரப் பல்லவனால் பாடலிபுரத்துக்கோயிலை அழித்துக் கட்டப்பெற்றதென்பது வரலாறு. திருஞானசம்பந்த சுவாமிகளுக்குத் திருநடங் காட்டியருளிய தலம். சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்குச் சித்தவடமடத்தில் திருவடி தீட்சை அளித்த இடமும் இதுவே. மெய்கண்டதேவர் மாணாக்கராகிய மனவாசகங்கடந்தார் உண்மை விளக்கம் செய்து அருளிய தலமும் இதுவே. இறைவன் பெயர் திருவதிகை வீரட்டானேசுவரர். திரிபுராந்தகேசுவரர். அம்மை திரிபுரசுந்தரி. தீர்த்தம் கெடிலம், சூலகங்கை, சக்கரதீர்த்தம் என்பன. தலவிருட்சம் சரக்கொன்றை. கல்வெட்டு: இத்தலத்தில் படி எடுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் 34. இவற்றில் ஏழு கல்வெட்டுக்கள் சாரநாராயணக் கோயிலைப் பற்றியவை. ஏனையவை திருவதிகை வீரட்டானமுடையார் கோயிலில் உள்ளவை. அவற்றுள், தெள்ளாற்றுப்போர் எறிந்த நந்திபோத்தரையன் விளக்குக் காக வைத்த நிபந்தம் 1, கோப்பெருஞ்சிங்கன் விளக்கிற்காகப் பசுவுங் காளையும் அளித்தமை 2, பரமேசுவரப் போத்தரையன் பொன்னளித்தமை ஆகிய பல்லவ பரம்பரை நிகழ்ச்சிகள் அறிவிக்கப் பெறுகின்றன. அவ்வாறே சோழர்களில் குலோத்துங்கன் I, II, III, இராஜேந்திர சோழன், பராந்தகன் இராஜாதிராஜன் II முதலிய சோழ அரசர்களும், விக்கிரமபாண்டியன், வீரபாண்டியன் முதலிய பாண்டிய மன்னர்களும் காளிங்கராயன், காடவராயன், கங்கபல்லவன் முதலியோர்களும் உணவிற்காகவும், நிவேதனத்திற்காகவும், விழாவிற்காகவும் நிலம் அளித்தமையைக் காட்டும் கல்வெட்டுகள் பல. 3சகம் 1235-ல் சேர அரசனான இரவிவர்ம வீரராஜ குலசேகரதேவனால் கோயில் முழுவதும் தூய்மைப்படுத்தப்பெற்ற செய்தி
1 36 of 1903, 2 47 of 1903, 3 34 of 1903,
|