இத்திருக்கோயில், கோப்பரகேசரி வர்மனது ஆட்சியாண்டில் கற்றளியாகக் கட்டப்பட்டது. இத்தளியைச் செய்தவன் அருகூர்த் தச்சன் நாராயணன் வேற்கந்தனாகிய திருவாமாத்தூர் ஆசாரியன் ஆவன். திருச்சுற்று மண்டபத்தைக் கட்டியவன் செம்பியன் காத்திமானடிகள் ஆவன். கோப்பரகேசரி வர்மன் கல்வெட்டில் இவ்வூர், அருவாநாட்டு மீய்வழி வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், கோப்பரகேசரி வன்மரான இராஜேந்திர சோழதேவன் அல்லது கங்கைகொண்ட சோழன் கல்வெட்டில், ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் பனையூர்நாட்டு, வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், முதற் குலோத்துங்க சோழன் காலத்தில் கங்கைகொண்ட சோழவளநாட்டுப் பனையூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், "பூமேவுவளர் திருப்பொன் மார்வுபுணர" என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையுடைய இராசகேசரி, திருபுவனச் சக்கரவர்த்தி குலோத்துங்க சோழ தேவர் காலத்தில் இராஜராஜ வளநாட்டுப் பனையூர்நாட்டு வாவலூர் நாட்டுத் தேவதானம் திருவாமாத்தூர் எனவும், வழங்கப்பட்டிருந்தது. இக்கல்வெட்டுக்களினால் திருநுந்தாவிளக்கு எரிப்பதற்குத் துலைநிறை செம்பொன், ஆடுகள் இவைகளையும் திருச்சந்திக்குத் திருச்சந்தனம், சீதாரி இவைகளுக்குப் பொன்னும், திருப்பதிகம் பாடுவதற்கு நிலநிவந்தமும் அளிக்கப்பெற்ற செய்திகள் புலப்படுகின்றன. இத்திருக்கோயிலில், மூன்று சந்திகளிலும், திருப்பதிகம் பாடி வருவதற்குக் குருடர்கள் பதினாறுபேர்களும், அவர்களுக்குக் கண் காட்டுவார் இருவரும் ஆகப் பதினெண்மர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்குத் தலைக்கு நெல் பதக்காக நாளொன்றுக்கு முக்கலமாக நாள் 360-க்கு நெல் ஆயிரத்து எண்பதின் கலமும், புடைவை முதலுக்குப் பேரால் காசு ஒன்றாக காசு பதினெட்டுக்கு, காசு ஒன்றுக்கு நெல் இருபதின் கலமாகவும் வந்த நெல் 1440 கலத்துக்கு, வேலி ஒன்றுக்கு நெல் நூற்று இருபது கலமாக ஆமாத்தூர் இறைவர் தேவதானம் கடுவனூரில் பன்னிரண்டுவேலி
1 See the Annual Reports on South Indian Epigraphy for the year 1903, No. 402 - 435; year 1922, No. 1 - 71. See also the South Indian Inscriptions. Volume VIII, No. 718 - 751. (South Arcot District, Vilupuram Taluk)
|