34. | சிந்தித்தெழு வார்க்குநெல் லிக்கனியே | | சிறியார்பெரி யார்மனத் தேறலுற்றால் | | முந்தித்தொழு வார்இற வார்பிறவார் | | முனிகள்முனி யேஅம ரர்க்கமரா | | சந்தித்தட மால்வரை போற்றிரைகள் | | தணியாதிட றுங்கட லங்கரைமேல் | | அந்தித்தலைச் செக்கர்வா னேஒத்தியால் | | அணியார் பொழில் அஞ்சைக் களத்தப்பனே. | | 3 |
நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, விரும்பத் தகாத பாம்பை, பிடித்து ஆட்டுதலையும், பூணாகப் பூணுதலையும் மேற்கொண்டது என்? விளங்குகின்ற சடையின்கண் பிறையைச் சூடியது என்? சாம்பலை எடுத்து உடம்பு முழுதும் பூசிக் கொண்டது என்? இழிந்த எருதினையே ஊர்தியாகக் கொள்ள விரும்பியது என்? கு-ரை: 'ஓர் நாகத்தை' என்றது, இடைநிலைத் தீவகமாய், முன்னும் சென்று இயைந்தது. அதன்கண், 'ஒன்று' என்பது, 'சிறிது' என்னும் பொருளதாய், இழிபினை உணர்த்திற்று. 'பொடித்தான்' என்புழித் தகரம், விரித்தல். ஏற்றிற்கு இழிவு, யானை, குதிரைகளோடு, நோக்க வருவது. 3. பொ-ரை: மூங்கில்களையுடைய பெரிய மலைகள் போலும் அலைகள் இடைவிடாது மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக் களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, உன்னை நினைந்து துயிலுணர்வார்க்கு நெல்லிக்கனி போன்றவனே, முனிவர்கட்கெல்லாம் முனிவனே, தேவர்கட்கெல்லாம் தேவனே, உன்னை உள்ளந்தெளியப்பெற்றால், சிறியாரும் பெரியாராவர். விரைந்து வந்து உன்னை வணங்குபவர், இறத்தலும் பிறத்தலும் இலராவர். அவரது உள்ளத்தைப் பிணித்தற்கு, நீ, மாலைக் காலத்தில் தோன்றும் செவ்வானம் போலும் அழகிய திருமேனியை உடையையாய் இருக்கின்றனை. கு-ரை: 'அடியேனும் அவ்வாற்றால் உன்னைத் தெளிந்து உன்னிடம் பிணிப்புண்டு, உன்னை வணங்கப்பெற்றேன் ஆதலின் எனக்கும் அவ்விறத்தல் பிறத்தல்களை நீக்கியருளல் வேண்டும்'
|