பக்கம் எண் :

479
 

6. திருவெண்காடு

பதிக வரலாறு:

சுந்தரர் திருச்சாய்க்காட்டீசரைப் பணிந்து போற்றித் திருவெண்காடு சென்று வணங்கிப் பாடிப் பரவியது இத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 148.)

குறிப்பு: இத் திருப்பதிகம், சிவபிரானை, தனது பெருமைக்கு ஏலாதன போலத் தோன்றும் கோலங்களை யுடைமைக்குக் காரணம் வினவு முகத்தால், அவை உலக நலத்தின் பொருட்டுக் கொண்டனவாதல் தோன்ற அருளிச்செய்தது.

பண்: இந்தளம்

பதிக எண்: 6

திருச்சிற்றம்பலம்

52.படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்

பாய்பு லித்தோல் அரையில் வீக்கி

அடங்க லார்ஊர் எரியச் சீறி

அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்

மடங்க லானைச் செற்று கந்தீர்

மனைகள் தோறுந் தலைகை யேந்தி

விடங்க ராகித் திரிவ தென்னே

வேலை சூழ்வெண் காட னீரே. 

1

 

1. பொ-ரை: கடல் சூழ்ந்த திருவெண்காட்டையுடைய இறைவரே, நீர், படத்தையுடைய பாம்பைத் தலையிலே வைத்து, பாய்கின்ற புலியினது தோலை அரையிற் கட்டி, பகைவரது திரிபுரங்கள் எரிந்தொழியுமாறு வெகுண்டு, அந்நாளிற்றானே அவ்வூரிலுள்ள மூவருக்கு அருள் பண்ணினீர்; கூற்றுவனை முன்னர்க் கொன்று, பின்னர் உயிர்ப்பித்து, அவனை மகிழ்ந்து ஏற்றுக்கொண்டீர்; இன்ன பெருமைகளையுடையீராய் இருந்தும், தலை ஓட்டினைக் கையில் ஏந்திக்கொண்டு, பேரழகுடைய உருவத்துடன் மனைகள் தோறும் பிச்சைக்குத் திரிவது என்?

கு-ரை: திரிபுரம் எரித்த ஞான்று, ஆங்கிருந்த அசுரர்களுள் புத்தன் போதனையால் சிவநெறியைக் கைவிடாதிருந்த மூவரைச் சிவபிரான் உய்யக்கொண்டு, ஒருவனைக் குடமுழா முழக்கு