பக்கம் எண் :

494
 
72. முத்து நீற்றுப் பவள மேனிச்

செஞ்சடை யானுறையும்

பத்தர் பந்தத் தெதிர்கொள் பாடிப்

பரமனை யேபணியச்

சித்தம் வைத்த தொண்டர் தொண்டன்

சடைய னவன்சிறுவன்

பத்தன் ஊரன் பாடல் வல்லார்

பாதம் பணிவாரே.

11

திருச்சிற்றம்பலம்


11. பொ-ரை: முத்துப்போலும் வெள்ளிய நீற்றையும், பவளம் போலும் செய்ய திருமேனியையும், சிவந்த சடையையும் உடைய இறைவன் வாழும், அடியவர் மனம் பிணிப்புண்ணுதலையுடைய திருஎதிர்கொள்பாடியில் உள்ள பெருமானை வணங்கவே விரும்பின, சிவனடியானும், சிவனடியார்க்கு அடியானும், 'சடையன்' என்பானுக்கு மகனும் ஆகிய நம்பியாரூரனது இப்பாடல்களை நன்கு பாடவல்லவர், அப்பெருமானது திருவடியை அடைந்து வணங்கியிருப்பர்.

கு-ரை: எதிர்கொள்பாடியின் சிறப்புணர்த்துகின்றாராதலின், "செஞ்சடையான்" என வேறொருவன்போல, அருளினார். ஆதலின், 'எதிர்கொள்பாடியில் உறையும் செஞ்சடையானாகிய பரமன்' என்பதே கருத்தென்க. "பாதம்" என்புழி, 'அவன்' என்பது எஞ்சி நின்றது. ஏகாரம், பிரித்துக் கூட்டப்பட்டது.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
 

எத்திசையும் தொழுதேத்த மத்தயானை

யெடுத்தெதிர்கொள் பாடியினை அடைவோம் என்னும்

சித்தநிலைத் திருப்பதிகம் பாடிவந்து

செல்வமிகு செழுங்கோயில் இறைஞ்சி நண்ணி

அத்தர்தமை அடிவணங்கி அங்கு வைகி

அருள்பெற்றுத் திருவேள்விக் குடியில் எய்தி

முத்திதரும் பெருமானைத் துருத்தி கூட

மூப்பதிலை எனும்பதிகம் மொழிந்து வாழ்ந்தார்.

121

- தி. 12 சேக்கிழார்.