பக்கம் எண் :

536
 
129.மாதார்மயிற் பீலியும்

வெண்ணுரை யுந்தித்

தாதாரக்கொணர்ந் தெற்றிஓர்

பெண்ணை வடபால்

போதார்ந்தன பொய்கைகள்

சூழுந் துறையூர்

நாதாஉனை வேண்டிக்கொள்

வேன்தவ நெறியே. 

7

130.கொய்யார்மலர்க் கோங்கொடு

வேங்கையுஞ் சாடிச்

செய்யாரக்கொணர்ந் தெற்றிஓர்

பெண்ணை வடபால்

மையார்தடங் கண்ணியர்

ஆடுந் துறையூர்

ஐயாஉனை வேண்டிக்கொள்

வேன்தவ நெறியே. 

8



7. பொ-ரை: அழகு நிறைந்தனவான மயிற்பீலியையும், வெள்ளிய நுரைகளையும் தள்ளி, பல மலர்களை மகரந்தத்தோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண், மலர்கள் நிறைந்தனவாகிய பொய்கைகள் சூழப் பெற்று விளங்கும் திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

கு-ரை: ‘மாது ஆர்’ என்றதற்கு, ‘விருப்பம் நிரம்ப உண்டாதற்கு உரிய’ என்று உரைத்தலும் ஆம்.

8. பொ-ரை: கொய்தல் பொருந்திய மலரையுடைய கோங்க மரம், வேங்கை மரம் இவைகளை முரித்துக்கொணர்ந்து, வயல் நிறைய எறிவதாகிய, ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண், மை பொருந்திய கண்களையுடைய மகளிர் மூழ்கியாடும் ஒரு துறைக்கண் உள்ள திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தலைவனே, உன்பால் அடியேன் தவநெறியையே வேண்டிக்கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.