21. திருக்கச்சிமேற்றளி பதிக வரலாறு: வன்றொண்டர் காஞ்சிபுரத்தில் தங்கியிருக்கும் நாள்களில் திருக்காமக்கோட்டம் சென்றிறைஞ்சி, திருக்கச்சி மேற்றளி தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 190.) குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரைத், திருக்கச்சி மேற்றளியில் தரிசித்த ஞான்று மீதூர்ந்த அன்பின் பெருக்கால், 'அடியேன் உம்மை யன்றிப் பிறரைப் புகழகில்லேன்' என அருளிச்செய்தது. பண்: நட்டராகம் பதிக எண்: 21 திருச்சிற்றம்பலம் 209. | நொந்தா வொண்சுடரே நுனை | | யேநி னைந்திருந்தேன் | | வந்தாய் போயறியாய் | | மனமேபு குந்துநின்ற | | சிந்தாய் எந்தைபிரான் திரு | | மேற்ற ளிஉறையும் | | எந்தாய் உன்னையல்லால் இனி | | ஏத்த மாட்டேனே. | | 1 |
1. பொ-ரை: அவியாத ஒளிபொருந்திய விளக்குப் போல்பவனே, என் தந்தைக்கும் பெருமானே, கச்சித்திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கின்ற என் தந்தையே, உன்னையே நினைந்திருந்த என் உள்ளத்திலே புகுந்துநின்ற சிந்தனைப் பொருளே, என் உள்ளத்தில் புகுந்த நீ பின் நீங்கியறியாய்; ஆதலின், இனி அடியேன் உன்னையன்றிப் பிறரைப் புகழவே மாட்டேன். கு-ரை: 'நுந்துதல் - தூண்டுதல். அதுவே, நொந்துதல் என மருவிற்று' என்றலும் ஆம். சுடர், உவமையாகுபெயர். பின் இவ்வாறு வருவனவும் அவை. 'நின், உன்' என்பனவேயன்றி, 'நுன்' என்பதும் திருமுறைகளில் உள்ளது என்பதை, ஆறாந்திருமுறைக் குறிப்பிற் காண்க. "சிந்தை" என்பது, சிந்தையுள் நிற்கும் பொருளைக் குறித்தது.
|