பக்கம் எண் :

612
 
223.உங்கைக ளாற்கூப்பி உகந்

தேத்தித்தொழு மின்தொண்டீர்

மங்கையொர் கூறுடையான் வா

னோர்முத லாயபிரான்

அங்கையில் வெண்மழுவன் அலை

யார்கதிர் மூவிலைய

பங்கய பாதனிடம் பழ

மண்ணிப் படிக்கரையே.

5

 

224.செடிபடத் தீவிளைத்தான் சிலை

யார்மதிற் செம்புனஞ்சேர்

கொடிபடு மூரிவெள்ளை எரு

தேற்றையும் ஏறக்கொண்டான்

கடியவன் காலன்றன்னைக் கறுத்

தான்கழற் செம்பவளப்

படியவன் பாசுபதன் பழ

மண்ணிப் படிக்கரையே.

6



5. பொ-ரை: தொண்டர்களே, உமையை ஒரு கூறில் உடையவனும், தேவர்களுக்கு முதற்பொருளாய தலைவனும், அகங்கையில் வெள்ளிய மழுவை உடையவனும், கொல்லுதல் பொருந்திய ஒளியை யுடைய முத்தலை வேலை (சூலத்தை) ஏந்திய, தாமரை மலர்போலும் பாதங்களையுடையவனும் ஆகிய இறைவனது இடமாகிய திருப்பழ மண்ணிப்படிக்கரையை விரும்பித் துதித்து உங்கள் கைகளால் கூப்பித் தொழுங்கள்.

கு-ரை: 'கைகளால் தொழுமின்' என இயையும், 'கூப்பி' என்பது இடைப் பிறவரல். அலை, 'அலைத்தல்' என முதனிலைத் தொழிற்பெயர்.

6. பொ-ரை: கற்கள் பொருந்திய கோட்டைகளில் தீமை உண்டாகத் தீயை எழுவித்தவனும், நல்ல புனங்களில் மேய்வதாகிய, தனது கொடியிற் பொருந்திய வலிய எருதாகிய ஆனேற்றை ஏறுதற்கு ஊர்தியாகவும் கொண்டவனும், பாதத்தால் கொடிய வலிய காலனைக் காய்ந்தவனும், செவ்விய பவளம் போலும் திருமேனியை உடையவனும், பாசுபத வேடத்தனும் ஆகிய இறைவன் எழுந்தருளியிருப்பது, 'திருப்பழமண்ணிப்படிக்கரை' என்னும் தலமே.