பக்கம் எண் :

616
 

23. திருக்கழிப்பாலை

பதிக வரலாறு:

வன்றொண்டர் திருக்குருகாவூர் அமர்ந்தருளுங் குழகரைப் பணிந்து பல பதிகளையும் வணங்கித் திருக்கழிப் பாலை சென்று தொழுது பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 ஏயர் கோன். புரா. 166)

குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவரைப் பல்வகையாலும் புகழ்ந்து அருளிச்செய்தது.

பண்: நட்டராகம்

பதிக எண்: 23

திருச்சிற்றம்பலம்

229.செடியேன் தீவினையில் தடு

மாறக் கண்டாலும்

அடியான் ஆவஎனா தொழி

தல்த கவாமே

முடிமேல் மாமதியும் அர

வும்மு டன்துயிலும்

வடிவே தாம் உடையார் மகி

ழுங்கழிப் பாலையதே.

1



1. பொ-ரை: திருமுடியின் மேல், பெருமை பொருந்திய பிறையும், பாம்பும் பகையின்றி ஒருங்கு கூடித் துயில்கின்ற வடிவத்தை உடையவர், குணம் இல்லாதவனாகிய யான் தீவினையில் கிடந்து தடுமாறுவதை நேரே பார்த்தாலும், 'அந்தோ! இவன் நம் அடியவன்!' என்று இரங்காது தாம் மகிழ்ந்து எழுந்தருளியுள்ள திருக்கழிப்பாலையில், வாளா இருத்தல் தகுதியாகுமோ!

கு-ரை: 'ஆவா (ஆஆ) ' என்னும் இரக்கக் குறிப்பின் அடுக்கு, இறுதிக்கண் குறுகிநின்றது. "கழிப்பாலை" என்புழி அது, பகுதிப்பொருள் விகுதி. 'கழிப்பாலையதன்கண்' என, இறுதிக்கண் தொக்க ஏழாவதை விரித்து, முன்னே, 'ஒழிதல்' என்பதனோடு முடிக்க. 'மதியும் அரவும் உடன் துயிலும் முடியினையுடையவர்' என்றது, வினைக்குக் காரணமான விருப்பு வெறுப்புக்களை உளவாக்கும் அறியாமையை நீக்கியருள்பவர் என்னும் குறிப்பினது.