பக்கம் எண் :

621
 
236.படைத்தாய் ஞாலமெலாம் படர்

புன்சடை யெம்பரமா

உடைத்தாய் வேள்விதனை உமை

யாளையொர் கூறுடையாய்

அடர்த்தாய் வல்லரக்கன் தலை

பத்தொடு தோள்நெரியக்

கடற்சா ருங்கழனிக் கழிப்

பாலை மேயானே.

8

237.பொய்யா நாவதனாற் புகழ்

வார்கள் மனத்தினுள்ளே

மெய்யே நின்றெரியும் விளக்

கேயொத்த தேவர்பிரான்

செய்யா னுங்கரிய நிறத்

தானுந் தெரிவரியான்

மையார் கண்ணியொடும் மகிழ்

வான்கழிப் பாலையதே.

9



8. பொ-ரை: விரிந்த புல்லிய சடையினை யுடைய எங்கள் இறைவனே, உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனே, கடலைச் சார்ந்த, கழனிகளையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, நீ, உலகம் எல்லாவற்றையும் படைத்தாய்; தக்கனது வேள்வியை அழித்தாய்; வலிய அரக்கனாகிய இராவணனது பத்துத் தலைகளோடு இருபது தோள்களும் நெரியும்படி நெருக்கினாய்; இவை உன் வல்லமைகள்!

கு-ரை: 'எல்லாவற்றையும் ஆக்கவும், அழிக்கவும் வல்லவன் நீ' என்றபடி.

9. பொ-ரை: பொய் கூறுதல் இல்லாத நாவினால் புகழ்கின்றவர்களது மனத்தில் அணையாது எரியும் விளக்கே போல விளங்கி நிற்கின்ற பெரிய தேவனும், செம்மை நிறமுடைய பிரமனும், கருமை நிறமுடைய திருமாலும் அறிதற்கரியவனும் ஆகிய சிவபிரான் திருக்கழிப்பாலையையே விரும்பி, மைபொருந்திய கண்களையுடைய உமா தேவியோடும் எழுந்தருளியிருப்பான்.