பக்கம் எண் :

627
 
245.சந்தா ருங்குழையாய் சடை

மேற்பிறை தாங்கிநல்ல

வெந்தார் வெண்பொடியாய் விடை

யேறிய வித்தகனே

மைந்தார் சோலைகள்சூழ் மழ

பாடியுள் மாணிக்கமே

எந்தாய் நின்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.

7

246.வெய்ய விரிசுடரோன் மிகு தேவர்

கணங்களெல்லாம்

செய்ய மலர்களிட மிகு

செம்மையுள் நின்றவனே

மையார் பூம்பொழில்சூல் மழ

பாடியுள் மாணிக்கமே

ஐயா நின்னையல்லால் இனி

யாரை நினைக்கேனே.

8



7. பொ-ரை: பொருத்து வாய் உடைய குழையை அணிந்தவனே, சடையின்கண் பிறையைத் தாங்கியுள்ளவனே, வெந்து நிறைந்த நல்ல வெண்டிரு நீற்றை அணிந்தவனே, இடபத்தை ஏறும் ஊர்தியாகக் கொண்ட சதுரப்பாட்டினை உடையவனே, அழகு பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழும் மாணிக்கம்போல்பவனே, என் தந்தையே, நான் உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன்?

கு-ரை: "தாங்கி" என்றது பெயர்; எச்சமாக்கின், அது, "பொடியாய்" என்ற வினைக் குறிப்புப் பெயரொடு முடியும்.

8. பொ-ரை: வெப்பமான விரிகின்ற கதிர்களை யுடைய பகலவன் முதலாக மிகுந்த தேவர் கூட்டங்கள் எல்லாம், நல்ல மலர்களை இட்டு வழிபட, அவர்கட்கு மிகவும் நேர் நின்று அருள் செய்கின்றவனே, இருள் நிறைந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் திகழ்கின்ற மாணிக்கம் போல்பவனே, என் தலைவனே, அடியேன் இப்பொழுது உன்னை யல்லாது வேறு யாரை நினைப்பேன்?