பக்கம் எண் :

658
 
281.அன்றா லின்னிழற்கீழ் அறம்

நால்வர்க் கருள்புரிந்து

கொன்றாய் காலனுயிர் கொடுத்

தாய்மறை யோனுக்குமான்

கன்றா ருங்கரவா கட

வூர்த்திரு வீரட்டத்துள்

என்றா தைபெருமான் எனக்

கார்துணை நீயலதே.

3

 

282.போரா ருங்கரியின் னுரி

போர்த்துப்பொன் மேனியின்மேல்

வாரா ரும்முலையாள் ஒரு

பாக மகிழ்ந்தவனே

காரா ரும்மிடற்றாய் கட

வூர்தனுள் வீரட்டானத்

தாரா வென்னமுதே எனக்

கார்துணை நீயலதே.

4



அருள்பண்ணி, காலன் உயிரைக் கொன்ற வன்செயலையும் செய்தாய்; அந்தணச் சிறுவனுக்கு முடிவில்லாத வாழ்நாளைக் கொடுத்தாய்; இன்னதன்மையை உடைய நீயல்லாது வேறு யாவர் எனக்குத் துணை!

கு-ரை: நால்வர்க்கு அறமுரைத்தமையும், காலன் உயிரைக் கொன்றமையும் எல்லா முதன்மையையும் உணர்த்தும் குறிப்புக்களாகும். 'நாள்' என்பது ஆற்றலாற் கொள்ளப்பட்டது. 'மறையோனுக்கு நாள்' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். "காலன்" என்புழி ஐயுருபு விரித்து, 'மறையோனுக்கு உயிர்கொடுத்தாய்; என்றுரைப்பாரும் உளர்.

4. பொ-ரை: போர்த் தொழில் பொருந்திய யானையின் தோலைப் பொன்போலும் மேனிமேல் போர்த்துக்கொண்டும், அம்மேனியின் ஒரு பாகத்தில் கச்சுப் பொருந்திய தனங்களையுடைய உமையை மகிழ்ந்து வைத்தும் உள்ளவனே, கருமை பொருந்திய கண்டத்தை உடையாய், திருக்கடவூரினுள் 'வீரட்டானம்' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற, தெவிட்டாத என்னுடைய அமுதம் போல்பவனே, எனக்கு நீயல்லாது வேறு யாவர் துணை!