பக்கம் எண் :

697
 
335.வந்து சொல்லுமின் மூட னேனுக்கு

வல்ல வாநினைந் தேத்துவீர்

வந்த சாயினை யறிவ ரோதம்மை

வாழ்த்தி னார்கட்கு நல்லரோ

புந்தி யாலுரை கொள்வ ரோஅன்றிப்

பொய்யின் மெய்யுரைத் தாள்வரோ

அன்றி யேமிக அறிவ ரோநமக்

கடிக ளாகிய வடிகளே.

6



அவர் ஏறுவது  விடையோ? அவர் வேதத்திற்குத் தலைவரோ? அரை நாணாகப் பாம்பு ஒன்றைப் பிடித்து அரையில் கட்டுவரோ? நம்மேல் ஆணையாக நமக்கு நன்மை நிரம்புமாறு நம்மை ஆளுவரோ? சொல்லுமின்.

கு-ரை: "கொடுகொட்டி காலில் ஓர் கழல்" என்பது உம்மைத் தொகைபடத்தொக்கு ஒரு சொல்லாய் இறுதி நிலை ஏற்றது. முதற்கண், 'அடிகள்' என்றது, 'ஆள்பவர்' என்னும் பொருளதாய் நின்றது. 'காலர் கழலரோ' என்பது பிழைபட்ட பாடம்.

6. பொ-ரை: இறைவரை நீர் வல்லவாற்றால் நினைந்து துதிக் கின்றவர்களே, யாதும் அறியாதேனாகிய எனக்கு நீங்கள் அருகில் வந்து சொல்லுங்கள்; நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் நமக்கு வருகின்ற மெலிவை அறிந்து தீர்ப்பரோ? தம்மை வாழ்த்துகின்றவர்கட்கு நலம் செய்வரோ? மனத்தொடு பொருந்தச் சொல்லுதலையே ஏற்பரோ? மற்றும் தாமும் பொய்யில்லாத மெய்யையே சொல்லி நம்மை ஆட்கொள்வரோ? அதுவன்றி அறிவை மிக உடையரோ? சொல்லுமின்.

கு-ரை: "புத்தியால்" என்புழி ஆல் உருபு ஓடுருபின் பொருளில் வந்தது. "உரை" முதனிலைத் தொழிற் பெயர். இதற்கு, 'எம் உரையைத் தம் புந்தியால் ஏற்பரோ' என்று உரைப்பாரும் உளர்.

அறிவு மிக உடையராதல், எல்லாம் அறிதலும், தாமே அறிதலும், அறிந்தாங்கறிதலும் உடையராதல். ஈண்டும், 'அறவரோ' என்று பாடம் ஓதுவார் உளர்.