கற்பனை கடந்த கடவுள்: நமது கற்பனைக்கு எட்டாத வடிவமும் குணங்களும் உடைய இறைவனே நம்முள்ளே ஆயிரமாயிரம் கற்பனைகளைத் தோற்றுவிக்கிறான். கற்பனை கற்பித்த கடவுளை வன்தொண்டர் - பழவினை போக்கும் பரமனாகவும், செய்வினை அறுத்திடும் செம்பொன்னாகவும், பிறவி வேரறுக்கும் பெருமானாகவும் விமரிசிக்கிறார். 'கல்இயல் மனத்தைக் கசிவித்துக் கழலடி காட்டி யென் களைகளை அறுக்கும்' (தி. 7 ப. 67 பா. 5) 'பந்தித்த வல்வினைப் பற்றறப் பிறவிப் படுகடல் பரப்புத் தவிர்ப் பானை' (தி. 7 ப. 67 பா. 7) 'அல்லல் உள்ளன தீர்த்திடு வானை' (தி. 7 ப. 56 பா. 10) 'ஓயுமாறு நோய் புணர்ப் பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை' (தி. 7 ப. 56 பா. 8) 'பறியா வினைகள் அவைதீர்க்கும் பரமா' (தி. 7 ப. 89 பா. 4) 'மலந் தாங்கிய பாசப் பிறப்பறுப்பீர்' (தி. 7 ப. 82 பா. 6) என்று வினைதீர்க்கும் விமலனைப் பற்றிப் பேசுவார். சோதியாய்த் தோன்றும் உருவமே யருவாம் | ஒருவனே சொல்லுதற் கரிய | ஆதியே நடுவே அந்தமே பந்தம் | அறுக்குமா னந்தமா கடலே | தீதிலா நன்மைத் திருவருட் குன்றே | திருப்பெருந் துறையுறை சிவனே | யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய் | வந்துநின் இணையடி தந்தே. | (தி. 8 கோயில் திருப். 9) |
என்று மணிவாசகப் பெருமானும் பந்தம் அறுக்கும் பரம்பொருளின் பெருமையைப் பேசுகிறார். பிள்ளை மதியணிந்த பிரானே முதற்கடவுள் என்பதில் நம்மவர்க்குத் தனிப் பெருமை உண்டு.
|