பக்கம் எண் :

713
 
350.செறுவி னிற்செழுங் கமலம் ஓங்குதென்

புகலூர் மேவிய செல்வனை

நறவம் பூம்பொழில் நாவ லூரன்

வனப்பகை யப்பன் சடையன்றன்

சிறுவன் வன்றொண்டன் ஊரன் பாடிய

பாடல் பத்திவை வல்லவர்

றவ னாரடி சென்று சேர்வதற்

கியாதும் ஐயுற வில்லையே.

11


திருச்சிற்றம்பலம்


கு-ரை: ''கையுலாவிய வேலன்'' என்றது, 'முருகன்' என்னும் பெயரளவாய் நின்றது. 'காமனேயென்று சால நல்வழக் குடையவனே கையுலாவிய வேலனே யென்று' எனவும் ஓதுப.

11. பொ-ரை: வயல்களில் செந்தாமரைகள் செழிக்கின்ற அழகிய திருப்புகலூரில் விரும்பி எழுந்தருளியுள்ள செல்வனாய சிவபெருமானை, தேனையுடைய பூஞ்சோலைகளை உடைய திருநாவலூரனும், வனப்பகைக்குத் தந்தையும், சடையனார்க்கு மகனும், வன்றொண்டனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளைப் பாட வல்லவர்கள், அறவடிவினனாகிய அப்பெருமானது அரிய திருவடிகளில் சென்று சேர்வர் என்றற்கு, ஐயுறற் காரணம் யாதும் அறுதியாக இல்லை.

கு-ரை: 'சிறுவன்' என்பது முறைமை சுட்டி வரும், 'மகன்' என்னும் பொருட்டாய் வந்தது.

ஏயர்கோன் கலிக்காமர் புராணம்

தொண்டர் உணர மகிழ்ந்தெழுந்து

துணைக்கைக் கமல முகைதலைமேல்

கொண்டு கோயி லுட்புக்குக்

குறிப்பி லடங்காப் பேரன்பு

மண்டு காத னுறவணங்கி

வாய்த்த மதுர மொழிமாலை

பண்டங் கிசையில் தம்மையே

புகழ்ந்தென் றெடுத்துப் பாடினார்.

-தி.12 சேக்கிழார்