பக்கம் எண் :

724
 
363.தூய வர்கண்ணும் வாயும் மேனியுந்

துன்ன ஆடை சுடலையில்

பேயொ டாடலைத் தவிரும் நீரொரு

பித்த ரோஎம் பிரானிரே

பாயும் நீர்க்கிடங் கார்க மலமும்

பைந்தண் மாதவி புன்னையும்

ஆய பைம்பொழில் சூழ்பைஞ் ஞீலியில்

ஆர ணீய விடங்கரே.

3


364.செந்த மிழ்த்திறம் வல்லி ரோசெங்கண்

அரவம் முன்கையில் ஆடவே

வந்து நிற்குமி தென்கொ லோபலி

மாற்ற மாட்டோ மிடகிலோம்

பைந்தண் மாமலர் உந்து சோலைகள்

கந்த நாறுபைஞ் ஞீலியீர்

அந்தி வானமும் மேனி யோசொலும்

ஆர ணீய விடங்கரே.

4



3. பொ-ரை: எம்பெருமானிரே, பாயுந் தன்மையுடைய நீரைக் கொண்ட அகழியில் நிறைந்துள்ள தாமரைகளும், அதன் கரையில், மாதவியும், புன்னையும் பொருந்திய' சோலைகள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியுள்ள, காட்டில் வாழும் அழகரே, நீர், கண்ணும், வாயும், மேனியும் அழகியராய் இருக்கின்றீர்; ஆயினும், தைத்த கோவணத்தை உடுத்து, சுடலையில் பேயோடு ஆடுதலை ஒழிய மாட்டீர்; நீர் ஒரு பித்தரோ? அவற்றை விட்டொழியும்.

கு-ரை: இஃது, அவர் பேயோடு ஆடுதலை நினைந்து அஞ்சியவள் கூறியது. தூய்மை, ஈண்டு அழகு. 'தூயவர்' என்பது இடவழுவமைதி. 'கண்ணும், வாயும், மேனியும்' என்றது, அவரது திருமேனியிற் சில உறுப்புக்களை விதந்தவாறு. ''ஆடை'' என்ற விடத்தும் இரண்டனுருபு விரிக்க. 'துன்ன ஆடையைத் தவிரும் என்றது, 'நல்லாடையை உடுத்து வாரீர்' என்றபடி. 'தவிரும் நீர் பித்தரோ' என்றமையால் பித்தரோ என்ற காரணம் புலப்படுத்தப்பட்டது.

4. பொ-ரை: பசிய, தண்ணிய, சிறந்த பூக்களை உதிர்க்கின்ற சோலைகள் நறுமணம் வீசுகின்ற திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளி