பக்கம் எண் :

756
 
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்

எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்

அலைமலிந்த புனல்மங்கை ஆனாயற் கடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

2


395.மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கு மடியேன்

முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்

செம்மையே திருநாளைப் போவாற்கும் அடியேன்

திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்

மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க

வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த

அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்

ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.

3



மலை மலிந்த - மலைத் தன்மை (பெருமையும், வலிமையும்) நிறைந்த. எஞ்சாத - தொண்டினை முட்டாது செய்த. 'மங்கை' என்பது 'மங்கலம்' என்பதன் மரூஉ. இஃது, ஊர்ப்பெயர்.

3. கு-ரை: ''மும்மை'' என்றது ''இருமை வகை தெரிந்து'' (குறள்-23) என்றாற்போல, 'மூன்று' எனப் பொருள் தந்தது. மூன்றாவன: திருநீற்றுப்பூச்சு, கண்டிகைக் கலன், சடைமுடி என்பன.

செம்மையே போவான் - பிறழாது நின்ற உள்ளத்தோடே போவான்.

மெய்ம்மையே - இப்பிறப்புப் பிள்ளைமைப் பருவத்து விளையாட்டானேயன்றி, முற்பிறப்பில் வழிபட்ட தொடர்ச்சியானே. ''திருமேனி'' என்றது, இலிங்கத் திருமேனியை. வெகுண்டது, அவரது நிலையை அறியாமையால் என்க. எழுந்த - பல தவறுகளைச் செய்ய எழுந்து, அங்ஙனமே செய்த. அம்மையான் அடி - வீடுபேற்றைத் தரும் முதல்வனது அடியையே பொருளாக அடைந்த. ''அலகில் கலையின் பொருட்கெல்லை ஆடுங் கழலே எனக் கொண்ட - செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார்'' (தி.12 சண்டேசுரர் புரா. 15) என்ற சேக்கிழாரது திருமொழியைக் காண்க.