பக்கம் எண் :

787
 
436.ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி
ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ
வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய்
மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே.

2


437.தொண்டர்கள் பாடவிண் ணோர்க ளேத்த உழிதர்வீர்
பண்டகந் தோறும் பலிக்குச் செல்வதும் பான்மையே
கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர்
மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே.

3



2. பொ-ரை: பெரிய களிற்றியானை, வெள்ளத்தினிடத்திற்சென்று அதனால் வளைத்துக்கொள்ளப்பட்டு மீளமாட்டாது வருந்திப் பின் அரிதில் மீண்டு பிளிறுதல் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, உமது, அழகு பொருந்திய, பொற்றாமரை மலர் போலும் செவ்விய இத்திருவடிகள், இத்தனை ஊரிலும் திரிந்தால், அவை வருந்துமோ! வருந்தாவோ!

கு-ரை: 'எம் கால்கள் வருந்தியே நிற்கின்றன; அருளல் வேண்டும்' என்பது குறிப்பெச்சம். 'இச் சேவடி' என இயையும். 'இத்தனையும்' என்றது, உலகில் உள்ள ஊர்களையெல்லாம் குறித்து, திரிதல், பிச்சைக்கு என்க. கொல், ஐயப்பொருளதாதலின், 'நோவா கொல்' என்பதும் கொள்ளப்பட்டது. ஓகாரம், அசைநிலை. நுமகால் நோவினும் - நோவாதொழியினும், நும்மைச் சார்ந்து திரிகின்ற எம் கால்கள் நோவு பொறுக்கின்றனவில்லை; ஆதலின், எமக்கு விரைந்து அருளுதல் வேண்டும் என்றபடி. 'வேரிக் கனகக் கமல மலர்' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்.

3. பொ-ரை: கைவாள் ஏந்தியவர், பெருவாள் ஏந்தியவர், வில் ஏந்தியவர் ஆகிய பலரும் புறத்து நின்று காக்கின்ற, புகழையுடைய, நெய் முதலியவற்றை முகந்து சொரிகின்ற கைகளால் வளர்க்கப்படுகின்ற வேள்விகளின் முழக்கம் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந்தருளியிருப்பவரே, நீர், அடியவர்கள் பாடவும், தேவர்கள் துதிக்கவும் தலைவராய்த் திரிவீர்; ஆதலின், பழைமையான இல்லங்கள்தோறும் பிச்சைக்குச் செல்வது தகுதியோ?

கு-ரை: 'எமக்கு அருளவேண்டுவதை மறைத்து இது செய்கின்றீர்; எனினும் இஃது உமக்குத்தகாது' என்றபடி. 'உழிதர்வீர்' என்றது, பல விடத்தும் பல்காலும் காணப்படுதலின் மிகுதி