பக்கம் எண் :

795
 
450.வேயன தோளி மலைம

களைவி ரும்பிய

மாயமில் மாமலை நாட

னாகிய மாண்பனை

ஆயன சொல்லிநின் றார்கள்

அல்ல லறுக்கினும்

பேயனே பித்தனே என்ப

ரால்எம் பிரானையே.

5


451.இறைவ னென்றெம் பெருமானை

வானவர் ஏத்தப்போய்த்

துறையொன் றித்தூ மலரிட்

டடியிணை போற்றுவார்

மறையன்றிப் பாடுவ தில்லை

யோமல்கு வானிளம்

பிறையன்றிச் சூடுவ தில்லை

யோஎம் பிரானுக்கே.

6



5. பொ-ரை: மூங்கில்போலும் தோள்களையுடையவளாகிய மலைமகளை விரும்புகின்ற, வஞ்சனை இல்லாத, பெரிய மலையிடத் தவனாகிய மாட்சியையுடைய எம்பெருமானை, தம்மால் இயன்றவைகளைச் சொல்லிப் புகழ்ந்து நின்றவரது துன்பங்களைக் களைதலைக் கண்டும், அவனைச் சிலர் 'அவன் பேயோடாடுபவன்; பித்துக் கொண்டவன்' என்று இகழ்வர்; எம்பெருமான், அவர் அங்ஙனம் இகழுமாறு இருத்தல் என்!

கு-ரை: ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம். மாயமில்லாதவன் என்றது அவனது பேரருளைக் குறித்தவாறு. ''மாமலை'' எனப்பட்டது, கயிலை. 'நாடு' என்றது 'இடம்' என்னும் பொருளது. ''பேயனே, பித்தனே'' என்னும் ஏகாரங்கள் தேற்றம்.

6. பொ-ரை: தேவர் எம்பெருமானை இறைவன் என்று அறிந்து துதிக்கச்சென்று, நன்னெறியிற் பொருந்தி, தூய மலர்களைச் சொரிந்து அவன் அடியிணையைப் போற்றுவர்; அங்ஙனமாக, அவனுக்கு, பாடும்பாட்டு, மறைகளன்றி வேறு ஒன்றும் இல்லையோ! சூடும் கண்ணி, வானத்திற்செல்லும் இளம்பிறையன்றி, வேறு ஒன்றும் இல்லையோ!