பக்கம் எண் :

803
 
462. எண்ணவன் எண்ணவன் ஏழுல

கத்துயிர் தங்கட்குக்

கண்ணவன் கண்ணவன் காண்டும்என்

பாரவர் தங்கட்குப்

பெண்ணவன் பெண்ணவன் மேனியொர்

பாகமாம் பிஞ்ஞகன்

அண்ணவன் அண்ணவன் ஆமாத்

தூர்எம் மடிகளே.

7

463. பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந்

தென்னைப்போ கவிடா

மின்னவன் மின்னவன் வேதத்தி

னுட்பொரு ளாகிய

அன்னவன் அன்னவன் ஆமாத்தூர்

ஐயனை ஆர்வத்தால்

என்னவன் என்னவன் என்மனத்

தின்புற் றிருப்பனே.

8



7. பொ-ரை: திருவாமாத்தூரில் எழுந்தருளியிருக்கின்ற எம் தலைவன் ஏழுலகத்திலும் உள்ள உயிர்கட்குக் கருத்தாய் உள்ளவன்; தன்னை, 'காண்போம்' என்று அன்பால் முயல்கின்றவர்கட்குக் கண்ணாய் உள்ளவன்; திருமேனி ஒரு பாகம் பெண்ணாகியவன்; பொருந்திய தலைக்கோலத்தை உடையவன்; அடையத் தக்கவன்.

கு-ரை: 'கருத்தாய் உள்ளவன்' என்றது, அறிவை உண்டாக்குதலையும், 'கண்ணாய் உள்ளவன்' என்றது, அவ்வறிவிற்குப் பொருள்களைப் புலப்படுத்துதலையும் குறித்தன. "தங்கள்" இரண்டும், சாரியை. 'அவர்' பகுதிப்பொருள் விகுதி. 'ஏழுலகத்துயிர் தங்கட்கும்' என்னும் முற்றும்மை, தொகுத்தலாயிற்று.

8. பொ-ரை: திருவாமாத்தூரில் எழுந்தருளியுள்ள தலைவன், அடியார்களுக்குப் பொன்போல்பவனாய் உள்ளவன்; பொன்னைக் கொடுத்து என்னைத் தன்னினின்றும் நீங்கவொட்டாது பிணித்துக் கொண்ட ஒளிவடிவினன்; வேதத்தின் உட்பொருளாய் உள்ள அத் தன்மையை உடையவன்; எனக்கு உரிமையுடையவன்; அவனை, யான் என்மனத்தில் அன்பால் நினைந்து இன்பமுற்றிருப்பேன்;