பக்கம் எண் :

809
 
470.

விட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக

வீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்

துட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்

சுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே

வட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்

மாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்

கட்டிஎமக் கீவதுதான் எப்போது சொல்லீர்

கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.

4



வைத்தநீர், இயைந்துள்ள உம் தேவியை நும்பால் வெறுப்புக் கொள்ளச் செய்தல் என்னை? என்பது குறிப்பு.

'எல்லாருங் காணப் பலி கொள்கையையும், நும் தேவி வெறுப்பன செய்தலையும் ஒழியீரா யினும், யான் வேண்டுவனவற்றை எனக்குஅளித்தருளல் வேண்டும்' என்பது கருத்தாகக் கொள்க.

4. பொ-ரை: கடற்கரைக்கண் உள்ள திருநாகைக் காரோணத்தில் விரும்பி எழுந்தருளியிருப்பவரே. நீர் வீணாக அடிமைகளை வைத்துக் கொண்டீர்; மற்றும், அவிழ்த்துவிட்ட சடைகள் கீழே விழ, வீணை அழகுடையதாய் விளங்க, தெருவில் விடையை ஏறிச் செல்வீர்; கொடி யனவாகிய பேய்கள் சூழநடன மாடுதலை மேற்கொண்டு. அழகுடையவராய், மாசற்ற பிறையைச் சூடுவது அழகோ? அன்றியும் வட்டமாக முடிக்கப்படுகின்ற நீண்ட கூந்தலையுடைய மகளிரை மயக்குவதுதான் உமக்குப் பெரிய தவமோ? அல்லது பெருமையோ? இவையெல்லாம் எவ்வாறாயினும் ஆக; எங்கள் துன்பமெல்லாம் நீங்கும்படி எங்கட்குப் பொற்கட்டியைக் கொடுப்பது எப்போது? சொல்லீர்.

கு-ரை: 'வீணடிமை உகந்தீர்' என்று கழறுவார், பிறவற்றையும் எடுத்துக் கூறிக் கழறினார் என்க.

'துட்ட' என்பது வடமொழி யாகலின், அதனடியாக வந்த பன்மை உயர்திணையாற் கூறப்பட்டுத் திணை மயக்கமாயிற்று. கொடிய பேய்கள் சூழ இருக்கின்ற உமக்குத் தூமதியம் தகாது' என்றவாறு.