பக்கம் எண் :

827
 
493.ஏடு வான்இளந் திங்கள் சூடினை

என்பின் கொல்புலித் தோலின்மேல்

ஆடு பாம்ப தரைக்க சைத்த

அழக னேஅந்தண் காவிரிப்

பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்

சோதி பாண்டிக் கொடுமுடிச்

சேட னேஉனை நான்ம றக்கினுஞ்

சொல்லும்நா நமச்சி வாயவே.

6



மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும்.

கு-ரை: 'அஞ்சுதல்' என்பது, இரண்டிடத்தும், அஞ்சி அடைதலின் மேற்று. "என்" என்றது. 'இல்லை, என்னும் பொருட்டு; அதனைத் தாம் கண்கூடாக அறிந்தமையைத் தெரிவித்தல் கருத்தாகலின், அதற்கு இவ்வாறுரைக்கப்பட்டது.

6. பொ-ரை: கொல்லுகின்ற புலியினது தோலின் மேல், ஆடுகின்ற பாம்பை, அரையின்கண் கட்டியுள்ள அழகனே, அழகிய, ஆழ்ந்த காவிரியாற்றினது, ஒலிக்கின்ற குளிர்ந்த நீர் வந்து பாய்கின்ற, 'திருப்பாண்டிக் கொடுமுடி' என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற மேலான ஒளியாய் உள்ளவனே, பெருமையுடையவனே நீ, வானத்தில் தோன்றுகின்ற, பூவிதழ்போலும் இளந்திங்களை முடியிற் சூடினாய்; அதன்பின் சான்று சொல்லவேண்டுவது என்! அதனால், உன்னை நான் மறந்தாலும், என் நா, உனது திருப்பெயராகிய, 'நமச்சிவாய' என்பதனை, இடையறாது சொல்லும்.

கு-ரை: 'சந்திரனைச் சடையிற் சூடியது ஒன்றே, நீ, குறைந்து வந்து அடைந்தாரை ஆழாமற் காப்பவன் என்பதற்குப் போதிய சான்றாம்' என்றபடி,

புலித்தோலாடையும், பாம்புக் கச்சும் உனது ஆற்றலை உணர்த்தும் என்பது குறிப்பு. "சேடன்" என்றதற்கு, யாவும் ஒடுங்கிய பின், எஞ்சியிருப்பவன்' என்றும் பொருள் கூறுவர்.