பக்கம் எண் :

849
 
523.

வன்னாக நாண்வரைவில்

லங்கிகணை அரிபகழி

தன்னாகம் உறவாங்கிப்

புரமெரித்த தன்மையனை

முன்னாக நினையாத

மூர்க்கனேன் ஆக்கைசுமந்

தென்னாகப் பிரிந்திருக்கேன்

என்ஆரூர் இறைவனையே.

6

524.

வன்சயமா யடியான்மேல்

வருங்கூற்றின் உரங்கிழிய

முன்சயமார் பாதத்தான்

முனிந்துகந்த மூர்த்திதனை

மின்செயும்வார் சடையானை

விடையானை அடைவின்றி

என்செயநான் பிரிந்திருக்கேன்

என்ஆரூர் இறைவனையே.

7


6. பொ-ரை: வலிய பாம்பு நாணியும், மலை வில்லும், திருமால் அம்பும், அங்கியங் கடவுள் அம்பின் முனையுமாகத் தன் மார்பிற் பொருந்த வலித்து முப்புரத்தை எரித்த தன்மையை உடையவனாகிய எனது திருவாரூர் இறைவனை முன்பே நினைந்து போக முயலாத மூடனேனாகிய யான், அவனைப் பிரிந்து, என்னாவதற்கு இவ்வுடலைச் சுமந்து இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன்.

கு-ரை: "பகழி" என்றதன்பின், 'ஆக' என்பது வருவிக்க.

7. பொ-ரை: பின்னிடாத வெற்றியையுடையவனாய்த் தன் அடியவன்மேல் வந்த கூற்றுவனை அவனது மார்பு பிளக்கும்படி வெற்றி பொருந்திய தனது திருவடியால் முன்பு உதைத்து, பின்பு எழுப்பிய மூர்த்தியும், மின்னலினது ஒளியை உண்டாக்குகின்ற நீண்ட சடையையும், விடையையும் உடையவனும் ஆகிய எனது திருவாரூர் இறைவனை அடைதல் இன்றிப்பிரிந்து, நான், என் செய்வதற்கு இவ்விடத்திற்றானே இருப்பேன்! இரேன்; விரையச் சென்று அவனை வணங்குவேன்.