பக்கம் எண் :

883
 
562.ஏத நன்னிலம் ஈரறு வேலி

ஏயர் கோன்உற்ற இரும்பிணி தவிர்த்துக்

கோத னங்களின் பால்கறந் தாட்டக்

கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற

தாதை தாளற எறிந்த சண்டிக்குன்

சடைமி சைமலர் அருள்செயக் கண்டு

பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன்

பூம்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

3

563.நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்

நாவினுக் கரையன் நாளைப்போ வானும்

கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி

கண்ணப் பன்கணம் புல்லன்என் றிவர்கள்



3. பொ-ரை: பூதகணங்கட்குத் தலைவனே, அழகிய சோலைகளையுடைய திருப்புன்கூரில் எழுந்தருளியிருப்பவனே, நீ, நல்ல நிலங்கள் பன்னிருவேலி கொடுத்த ஏயர்கோன் அடைந்த, துன்பத்தைச் செய்யும் பெரிய நோயை இப்பொழுது தீர்த்ததனையும், முன்பு பசுக்களது மடியில் நிறைந்திருந்த பாலைக் கறந்து ஆட்ட அதனைப் பொறாது அங்ஙனம் ஆட்டப்பட்ட அழகிய வெண் மணலாலாகிய பெருமான்மேற் சென்ற தந்தையது பாதங்கள் துணி பட்டு விழுமாறு வெட்டிய சண்டேசுர நாயனாருக்கு உனது முடியின் மேற் சூடியுள்ள கொன்றைமாலையை எடுத்துச் சூட்டியருளியதையும் அறிந்து வந்து, அடியேன், உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.

கு-ரை: 'உற்ற ஏத இரும்பிணி' எனவும் சென்றதாள் எனவும் இயையும். மேலைத் திருப்பாடலில், எல்லாம் இனிது விளங்க அருளினாராகலின், ஈண்டு "ஈரறு வேலி" என்றே அருளிப் போயினார். "வேலி ஏயர்கோன்" என்றது, 'வேலியைக் கொடுத்த ஏயர்கோன்' என விரியும். வரலாறு கூறுதலின், 'சிவன்' என்று வேறாக அருளினார். ஆளி - ஆளுதலையுடையவன்.

இது, சண்டேசுர நாயனார்க்குச் செய்த திருவருள் திறத்தைப் புகழ்ந்து அருளியது.

4. பொ-ரை: பொன்போலும், திரளாகிய அழகிய தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் எழுந்தருளி