பக்கம் எண் :

932
 

60. திருவிடைமருதூர்

பதிக வரலாறு:

சுவாமிகள், திருப்புகலூரில் பொன்பெற்றுத் திரும்பித் திருவாரூரை அடைந்து அமர்ந்திருந்தபின்னர், பல தலங்களை வணங்கப் புறப்பட்டு வணங்கிவருங்கால், திருவாவடுதுறையை வணங்கியபின் காவிரியின் தென்கரையில் உள்ள பல தலங்களைப் பணிந்து திருவிடைமருதூரையடைந்து இறைவரை வழிபட்டுப் பாடியருளியத் திருப்பதிகம். (தி. 12 ஏயர்கோன். புரா. 65)

குறிப்பு: இஃது உய்யும் நெறிக்கண் உள்ள பெருவிருப்பால், தம் நிலையை மறந்து, அதனை வேண்டி அருளிச்செய்தது.

பண்: தக்கேசி

பதிக எண்: 60

திருச்சிற்றம்பலம்

614.கழுதை குங்குமந் தான்சுமந் தெய்த்தாற்

கைப்பர் பாழ்புக மற்றது போலப்

பழுது நானுழன் றுள்தடு மாறிப்

படுசு ழித்தலைப் பட்டனன் எந்தாய்

அழுது நீயிருந் தென்செய்தி மனனே

அங்க ணாஅர னேயென மாட்டா

இழுதை யேனுக்கொர் உய்வகை யருளாய்

இடைம ருதுறை எந்தைபி ரானே.

1


1. பொ-ரை: என் அப்பனே, திருவிடைமருதூரில் எழுந்தருளி யிருக்கின்ற எம் குலதேவனே, கழுதையானது குங்குமப் பொதியைச் சுமந்து மெய்வருந்தினால், அதனால் சிறப்பொன்றும் இல்லாமை கருதி, அனைவரும் நகைப்பர்; அது போல, அடியேன் உன் தொண்டினை மேற்கொண்டு அதன் மெய்ப்பயனைப் பெறாமல் மனந்தடுமாறி, வெள்ளத்தில் உண்டாகின்ற சுழியிடை அகப்பட்டவன் போல, இவ்வுலக வாழ்க்கையில் அலமருவேனாயினேன்; 'மனமே, நீ நம் இறைவனுக்கு மெய்த்தொண்டு செய்யாது கவலைப்பட்டிருந்து என்ன பெறப் போகின்றாய்' என்று நெஞ்சிற்கு அறிவுறுக்கவும், 'அங்கணனே, அரனே' என்று உன்னை அன்பினால் துதிக்கவும் மாட்டாத அறிவில்லேனாகிய எனக்கு, நீ, மனம் இரங்கி, உய்யும் நெறியொன்றை வழங்கியருளாய்.