பக்கம் எண் :

950
 

62. திருக்கோலக்கா

பதிக வரலாறு:

சுவாமிகள், திருப்புன்கூர் அணைந்திறைஞ்சித் திருக்கோலக்கா செல்லும்பொழுதில், பெருமான் எதிர் வந்து காட்சி கொடுத்தருளக்கண்டு வணங்கித் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்ததைச் சிறப்பித்துப் பாடியருளியது இத்திருப்பதிகம். (தி. 12 பெரிய. புரா. ஏயர்கோன். புரா. 154)

குறிப்பு: இத்திருப்பதிகம், இறைவர் தாமே எதிர்வந்து கொடுத்தருளிய காட்சியைக் கண்ட களிப்பின்கண் அப்பேற்றினது அருமையை அருளிச்செய்தது.

பண்: தக்கோசி

பதிக எண்: 62

திருச்சிற்றம்பலம்

635.புற்றில் வாளர வார்த்தபி ரானைப்

பூத நாதனைப் பாதமே தொழுவார்

பற்று வான்துணை எனக்கெளி வந்த

பாவ நாசனை மேவரி யானை

முற்ற லார்திரி புரம்ஒரு மூன்றும்

பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக்

கொற்ற வில்அங்கை ஏந்திய கோனைக்

கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

1


1. பொ-ரை: புற்றில் வாழும் கொடிய பாம்பைக் கட்டியுள்ள பெருமானும், பூத கணங்கட்கு முதல்வனும், தன் திருவடியையே வணங்குவோர் விடாது பற்றுகின்ற சிறந்த துணைவனும், எனக்கு எளியவனாய் எதிர் வந்தவனும், அடியவரது பாவங்களைப் போக்கும் தொழிலை உடையவனும், யாவராலும் அடைதற்கு அரியவனும், செருக்கு மிக்கவர்களது மூன்று ஊர்கள் அழியுமாறு, திருமால் அம்பாகி நிற்க, வெற்றியைத் தரும் பெரிய மலையாகிய வில்லை அங்கையில் ஏந்திய தலைவனும் ஆகிய இறைவனை, அடியேன், திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டுகொண்டேன்.

கு-ரை: "பூத நாதன்" என்றது, 'உயிர்கட்கெல்லாம் முதல்வன்'