673. | தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி | | சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச் | | சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச் | | சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன் | | புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம் | | போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி | | அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன் | | ஆவ டுதுறை ஆதிஎம் மானே. | | 2 |
முதற்கடவுள்' என்றது, உன்னை முதற்கடவுளாக அறிதல் அனைவர்க்கும் ஆவதன்று என்றபடி. இது, மார்க்கண்டேயருக்குச் செய்த திருவருளை எடுத்தோதியருளியது. 2. பொ-ரை: திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள, எங்கள் முதற்கடவுளே, தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று, தனது வாயினின்றும் உண்டாகும் நூலால் அழகிய பந்தரை உறுதிப்பட ஆக்க, அச்சிலந்தியை, சுருண்ட, சிவந்த சடையை உடையையாகிய நீ சோழனாய்ப் பிறக்கச்செய்த திருவருளை அறிந்து, அடியேன், எனது எதிர் வினைக்கு அஞ்சித் துணுக்குற்று, உனது அழகிய மலர்போலும் திருவடியில் விழுந்து புரண்டு, 'போற்றி! போற்றி!' என்று துதித்து, அன்பினால் அழுது, உன்னை வந்து அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள். கு-ரை: சிலந்தியது தெருட்சி, அதனது வாய்க்கு ஆக்கப்பட்டது. சோழன், கோச்செங்கட் சோழ நாயனார்; இவரது வரலாற்றை, பெரிய புராணத்துள் விளங்க உணர்க. தொடர்ச்சி - தொடர்பு; அஃது அருளாகிய தொடர்பைக் குறித்தது. 'அரண்டு' என்பது, 'துணுக்குற்று' எனப் பொருள் தருவதொரு சொல். எதிர்வினை, இனிச் செய்யும் வினை; இஃது 'ஆகாமியம்' எனப்படும்; இது, பழவிவனையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடையதாகலின், அதற்கு அஞ்சிய அச்சத்தினையும், அதுபற்றி இரந்துநின்ற நிலையையும் இத்துணை வகுத்து அருளினார். இது, சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்தோதியருளியது.
|