உன்னை விட்டு நீங்கும் மனத்தினாலே, உனக்கு - உன்பொருட்டு, கலந்த அன்பு ஆகி - பொருந்தின அன்பை உடையேனாய், உள் கசிந்து உருகும் - மனம் கசிந்து உருகுகின்ற, நலந்தான் இலாத - நன்மையில்லாத, சிறியேற்கு - சிறியேனுக்கு, விமலா - மாசற்றவனே, நல்கி - கருணை புரிந்து, நிலத்தன்மேல் வந்தருளி - பூமியின்மேல் எழுந்தருளி, நீள் கழல்கள் காட்டி - நீண்ட திருவடிகளைக் காட்டி, நாயின் கடையாய்க் கிடந்த அடியேற்கு - நாயினும் கடையனாய்க் கிடந்த அடியேனுக்கு, தாயின் சிறந்த - தாயினும் மேலாகிய, தயா ஆன - அருள் வடிவான, தத்துவனே - உண்மைப்பொருளே. விளக்கம் : இறைவன் ஐம்பூதங்களிலும் நிறைந்திருக்கிறான். ஐந்து பூதங்களுக்கும் ஐந்து நிறங்கள் உண்டு. மண்ணுக்குப் பொன்மையும், நீருக்கு வெண்மையும், நெருப்புக்குச் செம்மையும், காற்றுக்குக் கருமையும், வானுக்குப் புகையையும் சாத்திரம் கூறும். "பொன்பார் புனல் வெண்மை பொங்கும் அனல் சிவப்பு வன்கால் கருமைவளர் வான்தூமம்" என்பது உண்மை விளக்கம். இந்த ஐந்து நிறங்களையுடைய ஐந்து பூதங்களிலும் இறைவன் இரண்டறக் கலந்திருத்தலால், "நிறங்கள் ஓர் ஐந்துடையாய்" என்றார். இனி, படைத்தல் முதலாக ஐந்து தொழில்கள் புரிவதற்கு ஐந்து வடிவங்கள் கொண்டிருக்கின்றான் என்றாலும் ஒன்று. ஐந்து வடிவங்களாவன, பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் வடிவங்கள். ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களுள் ஆணவம் நீங்குதற்பொருட்டே மாயையும் கன்மமும் சேர்க்கப்படுதலினால், "வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய இருள் மாய" என்றார். ‘அறம்பாவம்’ என்பன கன்ம மலம் எனவும், 'ஒன்பது வாயிற்குடில்' என்பது மாயா மலம் எனவும் அறிக. ‘இருளை, குடிலை’ என்பவற்றுள் உள்ள ஐகாரம் சாரியைகள். ஒன்பது வாயிலாவன - செவி இரண்டு, கண் இரண்டு, நாசி இரண்டு, வாய் ஒன்று, கருவாய் ஒன்று, எருவாய் ஒன்று. புலன்களால் பெறும் இன்பம் நிலையில்லாதது. முதலில் இன்பமாகத் தோன்றிப் பின் துன்பத்தைத் தருவது. அதனால், "குடில் மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய" என்றும், அவ்வஞ்சனைச் செயல்களால் இறைவனை மறத்தல் உண்டாவதால், 'விலங்கும் மனத்தால் கசிந்து உள் உருகும் நலந்தான் இலாத சிறியேன்' என்றும் கூறினார். "நாய், தலைவனை அறிவது : நன்றியுடையது. மனிதன் தலைவனையும் அறியமாட்டான்; நன்றியும் இல்லாதவன் ஆகையாலும், தாயன்பே சிறந்ததும், இழிவைக் கருதாததும் ஆகையாலும்,
|