பக்கம் எண் :

திருவாசகம்
34


"நாயிற்கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற்சிறந்த தயாவான தத்துவனே" என்றார்.

இவற்றால் தமக்கு இறைவன் திருப்பெருந்துறையில் குருவாய் வந்து அருளின திறத்தை வியந்து போற்றினார்.

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேனா ரமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

65. நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே

70. இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

75. கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்கும்எம் காவலனே காண்பரிய பேரொளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற

80. தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாந்
தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தையுள்
ஊற்றான வுண்ணா ரமுதே உடையானே

பதப்பொருள் : மாசு அற்ற சோதி மலர்ந்த - களங்கமற்ற சோதியாகிய மரத்தில் பூத்த, மலர்ச்சுடரே - பூப்போன்றே சுடரே, தேசனே - குரு மூர்த்தியே, தேனே - தேனே, ஆர் அமுதே - அரிய அமுதே, சிவபுரனே - சிவபுரத்தையுடையானே, பாசம் ஆம் பற்று அறுத்து - பாசமாகிய தொடர்பையறுத்து, பாரிக்கும் - காக்கின்ற, ஆரியனே - ஆசிரியனே, நேச அருள் புரிந்து - அன்போடு கூடிய அருளைச்செய்து, நெஞ்சில் வஞ்சம் கெட - என் மனத்தில் உள்ள வஞ்சகம் அழிய, பேராது நின்ற - பெயராமல் நின்ற, பெருங்கருணை - பெருங்கருணையாகிய, பேர் ஆறே - பெரிய நதியே, ஆரா அமுதே - தெவிட்டாத அமிர்தமே, அளவு இலாப் பெம்மானே - எல்லையில்லாத பெருமானே, ஓராதார் உள்ளத்து - ஆராயாதார் மனத்தில், ஒளிக்கும் - மறைகின்ற, ஒளியானே -