யான் விரும்புவேனல்லேன்; ஊர் வேண்டேன் - வாழ்வதற்கு ஊரை விரும்புவேன் அல்லேன்; பேர் வேண்டேன் - புகழை விரும்புவேன் அல்லேன்; கற்றாரை யான் வேண்டேன் - கல்வியை மட்டும் கற்றவரை யான் விரும்பமாட்டேன்; கற்பனவும் இனி அமையும் - கற்க வேண்டிய கல்விகளும் இனி எனக்குப் போதும்; உன் குரைகழற்கே - உனது ஒலிக்கின்ற கழலையுடைய திருவடிக்கே, கற்றாவின் மனம் போல - கன்றையுடைய பசுவினது மனத்தைப் போல, கசிந்து உருக வேண்டுவன் - கனிந்து உருகுவதை யான் உன்பால் விரும்புகின்றேன். விளக்கம் : கலைஞானத்தின் பயன் அனுபவம் பெறுதலேயாதலின், அதனைப் பெற முயலாது, கலை ஞானத்தை மட்டும் விரும்பிப் பயில்கின்றவர்களை 'வேண்டேன்' என்று கூறினார். அனுபவமே சிறந்தது என்பதாம். இவ்வனுபவம் தமக்குக் கிடைத்துவிட்டமையால், 'கற்பனவும் இனி அமையும்' என்றார். கற்றா - கன்று ஆ, கன்றையுடைய பசு. அது தன் கன்றினை நினைந்து கதறுவது போல, 'நான் உன்னை நினைந்து கதறி உருக வேண்டும்' என்பார், 'கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே' என்றார். இதனால், இறைவனது திருவடியை நினைந்து உருக வேண்டும் என்பது கூறப்பட்டது. 3 திருச்சிற்றம்பலம்
|