மறைக்காட்டுறையும் மணாளனாம் விழுமிய முழுமுதற் சிவபெருமான் திருவுள்ளம் பொறாது அத் திருக்கதவினை அடைப்பித்தருளினன் என்பது தெற்றெனப் புலனாகும். இவ் வுண்மை வருமாற்றான் உணர்க: "இடுசிறைக் கோட்டத் திட்டன ராக வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் 105. அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அதுகண்டு மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவம் திறவா தாகலின் திறவா தடைத்த திண்ணிலைக் கதவம் 110. மறவேல் மன்னன் கேட்டனன் மயங்கிக் கொடுங்கோ லுண்டுகொல் கொற்றவைக் குற்ற இடும்பை யாவதும் அறிந்தீ மின்னென." (சிலப்பதிகாரம், 23. கட்டுரைகாதை) இச் சிலப்பதிகாரச் செவ்விய அடிகளால் நாம் உணர்வது என்ன? நாட்டில் கொடுமை நடந்தால் தெய்வம் வாட்டமுணர்த்தப் பண்ணமைத் திண்மைத் திருக்கதவினை அடைக்கும் என்பதாம். அடைத்த அத் திருக்கதவினைத் திறக்கும் ஆற்றல் அப் பார்ப்பனர்க்கோ அவர்கள் ஓதிவரும் ஆரிய மறையினுக்கோ இல்லையென்பது எல்லாரும் வெளிப்படவுணரும் ஒன்றாயிற்று. பின்பு அப்பர் பெருமானும் சம்பந்தப் பெருமானும் திருவீழிமிழலையினின்று திருமறைக்காட்டுக்கு எழுந்தருளினர். இந் நிகழ்வினைக்கேட்டுத் திருமுறைத் திருமறைபாடித் திறக்கவும் அடைக்கவும் முறையே செய்வித்தருளினர். அவ்வுண்மை வருமாறு : "அருமறைகள் திருக்காப்புச் செய்து வைத்த அக்கதவந் திறந்திடவம் மறைகள் ஓதும் பெருகியவன் புடையடியா ரணைந்து நீக்கப் பெறாமையினா லன்றுமுத லாகப் பின்னை ஒருபுடையோர் வாயிலமைத் தொழுகுந் தன்மை உள்ளபடி கேட்டருளி யுயர்ந்த சண்பைத் திருமறையோர் தலைவர்வியப் பெய்தி நின்று திருநாவுக் கரசருக்குச் செப்புகின்றார். அப்பரே வேதவனத் தையர் தம்மை அபிமுகத்துத் திருவாயில் திறந்து புக்கே எப்பரிசு நாமிறைஞ்ச வேண்டும் நீரே இவ்வாயில் திருக்காப்பு நிங்குமாறு
|