"அந்தண் சோற்றுத் துறையெம் ஆதியைச் சிந்தை செய்ம்மின் அடியா ராயினீர் சந்தம் பரவு ஞான சம்பந்தன் வந்த வாறே புனைதல் வழிபாடே." (சம்பந்தர், 1. 28 - 11.) வழிபாடு - பூசை. நால்வர் பெருமக்களும் நம்பிரான் மூலரும் நாயனார் திருவருளால் பாடியருளிய திருமுறைகள் செந்தமிழ்மறையும், மறை முடிவும் முறையும் எனப்படும். முறை - ஆகமம். மறை - வேதம். மறைமுடிவு - உபநிடதம். இவை யனைத்தும் சிவபெருமான் திருமொழியேயாகும். அவ்வுண்மை வருமாறு : "ஒழுகலரி தழிகலியி லுழியுலகு பழிபெருகு வழியைநினையா முழுதுடலி லெழுமயிர்கள் தழுவுமுனி குழுவினோடு கெழுவுசிவனைத் தொழுதுலகி லிழுகுமல மழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப் பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகள் மொழிதகையவே." (சம்பந்தர். 3. 67 - 12.) இறைவன் நாக்கும், மூக்கும், வாயும், நோக்கும் முதலிய உறுப்புக்களைக் கொண்டன்று மறைபாடி யருள்வது. அவ்வுறுப்புக்களை இயல்பாகவே கொண்டுள்ள மயல்தீர் மெய்யடியார் தம் பொய்யில் திருவுள்ளத்து அருளுருவாய் நின்று மறை முதலெழுப்புவது. மறைமுதல் - மறைக்குக் காரணம். அதுவே 'நினைவோசை எனப்படும்.' பைசந்தி என்பதும் இதுவே. இதனையே 'சொற்பிரிவிலாதமறை' என்ப. இம் மறையினையே அவன் பாடியருள்வது. அவ்வுண்மை வருமாறு : "சொற்பிரிவி லாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை மற்புரிபு யத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத் துற்பரிய நஞ்சமுதமாகமுன யின்றவரி யன்றதொகுசீர் வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே." (சம்பந்தர், 3. 79 - 2.) ஆரியர் தங்கள் மறையினை ஓர் இறைவன் பாடினானென்று ஒப்புக்கொள்வதின்று. அவர்கள் தம் வேதம் தான்தோன்றி என்பர். தான்தோன்றி - கயம்பு. 'வேதங்கள் ஒருவராற் செய்யப்படாது நிலைபேறுடைமையானும்', என்பது சிவஞானபோதச் சொந்தமிழ்நூற்
|