தமிழ் மூவாயிரம் என்னும் திருமந்திரமானது நாயனார் மூலனுடைய உடம்பில் புகுந்த பின்னர்த்தான் செய்யப்பட்டது என்பது. "அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தைப் புகலிடத்தெம் மெய்யைப் போகவிட் டானை." என்ற பாசுரத்தாலும், "இருந்தேன் இக் காயத்தில் எண்ணிலி கோடி." என்ற பாசுரத்தாலும் அறியலாம். தமிழ் மூவாயிரம் என்னும் திருமந்திர நூலைத் திருவாவடுதுறையில் அரசமரத்தின் அடியில் தவமிருந்துகொண்டு படித்து முடித்துத் தம்முடைய ஏழு சீடர்களுக்கும் நாயனார் புகட்டி வந்தார் என்பது, "சேர்ந்திருந் தேன்சிவ மங்கைதன் பங்கனை சேர்ந்திருந் தேன்சிவ னாவடு தண்டுறை சேர்ந்திருந் தேன்சிவ போதியி னீழலில் சேர்ந்திருந் தேன்சிவ நாமங்கள் ஓதியே." என்ற பாசுரத்தாலும் அறியலாம். "மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன் இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன் கந்துரு காலாங்கி கஞ்ச மலையனோடு இந்த எழுவரும் என்வழி யாமே." என்ற பாசுரத்தாலும் அறியலாம். "இருந்த அக் காரணங் கேள் இந்திரனே." என்ற பாயிரச் செய்யுளில் இந்திரனை முன்னிலைப்படுத்தியும், "மாலாங்க னேயிங்கு யான்வந்த காரணம்." என்ற பாயிரச் செய்யுளில் மாலாங்கனை முன்னிலைப்படுத்தியும், "நேர்ந்திடு மூல சரியை நெறியிதென்று ஆய்ந்திடுங் காலாங்கி கஞ்சன் மலையமான் ஓர்ந்திடுங் கந்துரு கேண்மின்கள் பூதலத்து." என்ற பாசுரத்தில் காலாங்கியையும் கந்துருவையும் முன்னிலைப் படுத்தியும் நாயனார் கூறுவதால், மேலே "மந்திரம் பெற்ற வழி முறை" என்ற பாசுரத்தில்
|