கூறிய ஏழு சீடர்களில் நால்வர் சமகாலத்தவர்கள் என்றும், அவர்கள் எல்லாரும் நாயனாருடன் உடன் உறைந்தவர்கள் என்றும் அறிகிறோம். "ஓர்ந்திடுங் கந்துரு" எனத் தனிப்படுத்திக் கூறியுள்ளதால் கந்துரு என்பதே தனிப்பட்ட ஒரு சீடர் பெயர் என்றும். "ஆய்ந்திடும் காலாங்கி கஞ்சன் மலையமான்" என்றதால் அவை மூன்று சொற்களும் ஒரு சீடரையே குறிக்கும் என்றும் அறிகிறோம். எழுவரில் நால்வர் போக மீதியுள்ள சோமன் - பிரமன் உருத்திரன் என்பார் இந் நால்வருக்கும் சற்று முந்தியவர் ஆவார். ஆகமங்கள் ஒன்பதுதான் என்றும், பின் அவ்வொன்பது ஆகமங்களையும் 28 ஆகமங்களாகப் பிரித்துத் தனித்தனிப் பெயர்கள் கொடுத்து, ஒவ்வொரு ஆகமத்தையும் கருமகாண்டம், ஞான காண்டம், உபாசனாகாண்டம் என மும்மூன்று பிரிவுகளாகச் செய்தார்கள் என்றும், அவைகளே இப்போது சைவ உலகில் வழங்கி வருகின்றன என்றும், ஆதலின் மூலாகமங்கள் ஒன்பதே ஆகும் என்றும் நாயனார், "ஆகமம் ஒன்பான் அதிலான நாலேழும் மோகமில் நாலேழும் முப்பேத முற்றுடன் வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மையொன்(று) ஆக முடிந்த அருஞ்சுத்த சைவமே." என்ற பாசுரத்தால் விளக்கியுள்ளனர். நாயனார் மூவாயிரம் ஆண்டுத் தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார் என்பது எப்படி என்பார்க்கு, "ஈராறு கால்கொண் டெழுந்த புரவியைப் பேராமற் கட்டிப் பெரிதுணர வல்லிரேல் நீரா யிரமும் நிலமா யிரத்தாண்டும் பேராது காயம் பிரானந்தி யாணையே." "உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே." "மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள வேன்ற வியந்திரம் பன்னிரண் டங்குலம் நான்றவிழ் முட்டை இரண்டையுங் கட்டியிட் டூன்றி யிருக்க உடல்அழி யாதே."
|