ஐந்தாம் தந்திரம் [வாதுளாகமம்] 1. சுத்தசைவம்
(இயற்கைச் செந்நெறி) 1394. ஊரும் உலகமும் ஒக்கப் படைக்கின்ற பேரறி வாளன் பெருமை குறித்திடின் மேருவும் மூவுல காளி யிலங்கெழுந் தாரணி நால்வகைச் சைவமு மாமே.1 (ப. இ.) ஊர் உலகம் உடல் உறுப்பு உண்பொருள் எல்லாம் கருவியின்றிக் கலந்தியக்கும் கருத்தளவானே படைத்தருள்கின்றவன் சிவன். அவன் இயல்பாக விளங்கும் முற்றுணர்வுடைய பேரறிவாளனாவன். அவன்றன் அளவிலாப் பெருமையை நாமறிந்த அளவில் குறிப்போமானால் மேருவாகிய பொன்மலையும், மூவுலகையும் ஒருங்கு ஆளும் அவன் (சிவபெருமான்) படைத்தருளும் உலகமும், சுத்தம், மிகுசுத்தம், மார்க்கம், கடுஞ்சுத்தம் என்னும் நால்வகைச் சைவமும் ஓர் புடை ஒப்பாகச் சொல்லலாம். அசுத்தம் - மிகுசுத்தம். நால்வகைச் சைவமும் சிவபெருமானின் நின்றே தோன்றுவன. துளக்கமில்லாத சிவபெருமானின் அளத்தற்கரிய பெருமையினுக்குப் பொன்மலையொப்பாகும். எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கும் இயல்பினுக்கு நிலவுலகம் ஒப்பாகும். தவறாது திருவடிப்பேறாம் மெய்ப்பயன் தருதற்கு நால்வகைச் சைவம் ஒப்பாகும். சுத்தம் - உண்மை, இயற்கை, நால்வகைச் சைவம் வருமாறு: இயற்கைச் செந்நெறி, மீ இயற்கைச் செந்நெறி, மெய்யுணர்வுச் செந்நெறி, மெய்கண்டார் செந்நெறி என்பன. இவற்றை முறையே, சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுஞ்சுத்த சைவம் எனவும் கூறுப. அசுத்தம் என்பதில் 'அ' அப்பால் என்பதன் முதலெழுத்தாகும். எனலு மொன்று. செந்நெறி எனினும் சிவனெறி எனினும் ஒன்றே. (அ. சி.) நால்வகைச் சைவம் - சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுஞ்சுத்த சைவம். மேரு - பூமியின் மத்திய இரேகையும் நிரட்சர ரேகையும் சேரும் இடத்தில் இருந்து கடல் கொண்டடொழிந்த மேரு மலை. சுமேரு - வட துருவம் (North pole.) குமேரு - தென் துருவம் (South pole.) இங்கே நிலைதவறாமைக்கு உவமையாக வந்தது. மூவுலகு - பரந்து விரிந்த தன்மைக்கு உவமை. சைவம் - மெய்ப்பயன் தருவதற்கு உவமை. (1) 1395. சத்தும் அசத்துஞ் சதசத்துந் தான்கண்டு சித்தும் அசித்துஞ் சேர்வுறா மேநீத்த சுத்தம் அசுத்தமுந் தோய்வுறா மேநின்று நித்தம் பரஞ்சுத்த சைவர்க்கு நேயமே.2
1. பண்ணின். 12. சண்டேசுரர், 9. 2. யாவையும். சிவஞானபோதம், 7. " சத்தசத். சிவஞானசித்தியார், 7. 3 - 1.
|