பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை18

22.குண்டை வயிற்றுக் குறிய சிறிய நெடிய பிறங்கற்பேய்
இண்டை படர்ந்த இருள்சூழ் மயானத் தெரிவாய் எயிற்றுப்பேய்
கொண்டு குழவி தடவி வெருட்டிக் கொள்ளென் றிசைபாட
மிண்டி மிளிர்ந்த சடைகள் தாழ விமலன் ஆடுமே. 

10

 

23.சூடும் மதியம் சடைமேல் உடையார் சுழல்வார் திருநட்டம்
ஆடும் அரவம் அரையில் ஆர்த்த அடிகள் அருளாலே
காடு மலிந்த கனல்வாய் எயிற்றுக் காரைக் காற்பேய்தன்
பாடல் பத்தும் பாடி யாடப் பாவம் நாசமே. 

11

 

திருச்சிற்றம்பலம்


22. அ. சொ. பொ.: குண்டு - ஆழம், ஐ, சாரியை. ‘குறியனவாயும், சிறியனவாயும், நெடியனவாயும் பிறங்குதலை யுடைய பேய்’ என்க. பிறங்குதல் - விளங்குதல். இண்டு இண்டை; இண்டங் கொடி. வெருட்டுதல் - அச்சுறுத்தல். “பேய்” இரண்டையும் பன்மையாகக் கொள்க. பிள்ளைப் பேய்களைத் தாய்ப் பேய்கள் இருட் காலத்தில் தடவிக் கொடுத்து, ஆயினும் அச்சுறுத்தி, அவை குறும்பு அடங்கி அமைதியுற்றிருக்க இசை பாடின என்க. முதலில் உள்ள “பேய்” என்பதில் இரண்டன் உருபு விரிக்க. எரிவாய்ப் பேய் - கொள்ளி வாய்ப் பேய். கொள்ளென்று இசைபாடுதல் முன் பாட்டிலும் வந்தது. ‘குழவியாக’ என ஆக்கம் வருவிக்க. மிண்டுதல் - நெருங்குதல்.

23. அ. சொ. பொ.: ‘திருநட்டமாகச் சுழல்வார் என ஆக்கம் விரித்து, மாறிக் கூட்டுக. ‘அருளாலே பாடிய’ என ஒரு சொல் வருவிக்க. இதனால் அம்மையார் பாடல்கள் அருள்வழி நின்று அருளிச் செய்தனவாதல் அறிந்து கொள்ளப்படும். காடு மலிந்த - காட்டை மகிழ்ந்து அங்கு வாழ்கின்ற. அம்மையார் தமது பணிவு தோன்ற மற்றைப் பேய்களைப் போலவே தம்மை வருணித்துக் கொண்டார். ஆடுதல், பாடற் பொருள் விளங்கச் செய்கை காட்டி நடித்தல்.

மூத்த திருப்பதிகம் - 2 முற்றிற்று