பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை290

418.கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர்
உண்டு குளிர்ந்திலவென் றூடிப்போய்க் - கொண்டல்
இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே, நான்கு
மறைக்கீறு கண்டான் மலை.

19

419.கருங்களிற்றின் வெண்கொம்பாற் கல்லுரல்வாய் நல்லார்
பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப - வருங்குறவன்
கைக்கொணருஞ் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே,
மைக்கொணருங் கண்டன் மலை.

20

420.கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க
நனைய கலத்துரத்தில் ஏந்தி - மனைகள்
வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே, பாங்கார்
குரவரும்பு செஞ்சடையான் குன்று.

21


அதற்குக் கையாகவும் உதவும். கோச் சீயம் - தலைமைச் சிங்கம்; நரசிங்கம். இனி, 'கோ மாயோன்' என வைத்து, 'மாயோனாகிய சீயம்' எனினும் ஆம்.

418. குறிப்புரை: கண்ட கனி - கண்ணில் பட்ட கனிகளை யெல்லாம். கருமை, ஆழம் மிகுதியால் உண்டாயிற்று. 'கருநீர்' என இயையும். குளிர்தல் தாகம் தணிதல். மந்திகளின் பன்மையால் தாகமும் பலவாயின. ஊடுதல் - வெறுத்தல். 'கொண்டலை' எனவும், 'இறையால்' எனவும் ஏற்கும் உருபுகள் விரிக்க. இறை - கை அஃது ஆகுபெயராய், நகத்தை உணர்த்திற்று. ஈறு கண்டான் - முற்ற உணர்ந்தவன். உணரப் பட்டன அவற்றின் பொருள். அதனை முன்னே தான் உணர்ந்தாலன்றி உலகிற்கு அதனைச் சொல்லுதல் கூடாமை யறிக. ஒரு நூலின் பொருளை அதன் உரையாசிரியர் எவ்வளவு உணரினும் நூலை ஆக்கிய ஆசிரியன் கருத்தை முற்ற உணர மாட்டுவாரல்லர். அதனால், "மறைக்கு ஈறு கண்டான்" என்றது, 'அதனை உலகிற்கு அளித்த ஆசிரியன்' எனக் கூறிய வாறேயாம்.

419. குறிப்புரை: நல்லார் - அழகுடைய பெண்கள். 'தினையைப் பிண்டியாக இடிப்ப' என்க. பிண்டி - மா. வரும் - வெளிச்சென்று வருகின்ற. மை - மேகம் "மைக் கொணரும்" என்பதில் கொணரும். உவம உருபு, இனி, 'மை கருமை' எனக் கொண்டு, 'அதனைத் தன்பால் கொணர்ந்த கண்டன்' என்றலும் ஆம். இருவழியும் ககர ஒற்று விரித்தல். "கருங்களிற்றின் வெண்கொம்பு" என்பது முரண்தொடையும், விரோத அணியுமாம்.

420. குறிப்புரை: கனைதல் - செறிதல். அதனை, 'கனை யிருள்' என்பதனானும் அறிக. கனைய - செறிதலை உடைய. பல் ஆம்