| கானத் தலைவன் தன்மை; கண்ணுதல் வானத் தலைவன் மலைமகள் பங்கன் எண்ணரும் பெருமை இமையவர் இறைஞ்சும் புண்ணிய பாதப் பொற்பார் மலரிணை | 30. | தாய்க்கண் கன்றெனச் சென்றுகண் டல்லது வாய்க்கிடும் உண்டி வழக்கறி யானே, அதாஅன்று கட்டழல் விரித்த கனற்கதிர் உச்சியிற் கட்டடி இடுந்தொறுஞ் சுறுக்கொளும் சுரத்து முதுமரம் நிரந்த முட்பயில் வளாகத்து | 35. | எதிரினங் கடவிய வேட்டையில் விரும்பி |
வினையாலணையும் பெயர். இது வடிவியல்பு கூறிய பின் வேட்டையொழிந்தபொழுதும் மனத்தியல்பு அது வேயாதல் கூறியது. அடி-25, 26: “இது அக் கானகத் தலைவன் தன்மை” என்றது, ‘கண்ணப்ப தேவரது பிறப்பும். அவருக்கு வாய்த்த சூழ் நிலைகளும் திருவருளோடு சிறிதும் இயைபில்லனவாயினமை மேலும், அதற்கு மாறானவையும் இருந்தன’ என்பதனை முடித்துக் கூறியவாறு. கானம் - காடு. காட்டில் வாழும் வேடுவர்களைக் ‘காடு’ என உபசரித்துக் கூறினார். “அக்கானத் தலைவன்” எனச் சுட்டிக் கூறிய அவ் அனுவாதத்தானே, முதற்கண், ‘கானத் தலைவன் ஒருவன் இருந்தான்; அவன் பிறந்தது’ என எடுத்துக் கொண்டு உரைத்தல் கருத்தாதல் பெறப்பட்டது. அடி-26, 27: “கண்ணுதல்” முதலிய மூன்றும் ஒரு பொருள்மேல் வந்த பல பெயர்களாய்ச் ‘சிவன்’ என்னும் அளவாய் நின்றன. ‘பங்கன் பாதம்’ (29) என இயையும். இங்கும், “கண்ணுதல்” என்பதற்கு முன்னே, ‘அவன்’ என்னும் எழுவாய் வருவித்துக்கொள்க. அடி-28, 29: பெருமைப் பாதம், இறைஞ்சும் பாதம் புண்ணியப் பாதம்’ என்றபடி. பொற்பு ஆர் - அழகு நிறைந்த. ‘மலரிணையைக் (30) கண்டல்லது’ என இயையும். அடி-30, 31: தாய்க்கண் கன்று - தாய்ப் பசுவினிடம் செல்லும் கன்று. இஃது ஆரா அன்பினால் விரைந்தோடிச் செல்லுதலாகிய பண்பும், தொழிலும் பற்றி வந்த உவமை. கண்டல்லது உண்டி வழக்கறியான்” என்றதனால், ‘கண்டு வழிபட்ட பின்பே உண்ணும் நியமம் உடையரானார்” என்பது பெறப்பட்டது. ஆயினும் சேக்கிழார், ‘கண்ணப்பர் காளத்தி நாதரைக் கண்டபின் ஊண் உறக்கம் இன்றியே யிருந்தார்’ என்பது படக் கூறினார்.
|